லோக்சபா தேர்தலுக்கு முந்தைய காலிறுதி கேம்-1: பாஜகவை ரொம்பவே அலறவிட்ட திரிபுரா 'இந்தியா' கூட்டணி!
டெல்லி: லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் செமி பைனல் ஆட்டம் போல 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. காலிறுதி ஆட்டம் போல 2023-ம் ஆண்டு திரிபுரா சட்டசபை தேர்தலில் என்ன நடந்தது என்பதை இதில் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் என 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ந் தேதி வெளியாக உள்ளது. தென்னிந்தியா, இந்தி பெல்ட் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலம் என பரந்துபட்ட அளவில் நடைபெறும் 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும் அரை இறுதி ஆட்டம் போலவும் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இந்த ஆண்டு 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் தென்னிந்தியாவின் கர்நாடகாவில் இத்தேர்தல் நடைபெற்றது. இதனை லோக்சபா தேர்தலுக்கான காலிறுதி ஆட்டம் என்கிறோம்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் மாநில கட்சிகள் கை ஓங்கி இருந்தாலும் பெரும்பாலான 'வெல்லும் வாய்ப்பு'ள்ள கட்சிகள் பாஜகவுடன் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் கை கோர்த்தே இருக்கின்றன.

திரிபுரா: இடதுசாரிகளின் கோட்டையாக பாஜக கால் கூட வைக்க முடியாத ஒரு மாநிலமாக இருந்தது திரிபுரா. ஆனால் திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் அப்படியே வளைத்துப் போட்டது பாஜக. இதனால் திரிபுராவில் இப்போது பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து நிற்கிறது. திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 32 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
திரிபுரா கூட்டணிகள்: திரிபுராவில் பாஜகவும் ஐபிஎஃப்டி கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக களத்தை சந்தித்தன. பாஜக 55 தொகுதிகளிலும் ஐபிஎஃப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் என்ற பெயரில் காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணியில் சிபிஎம் 43; காங்கிரஸ் 13; சிபிஐ-1; புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி-1; பார்வார்டு பிளாக்-1 சுயேட்சை- 1 என போட்டியிட்டன. திப்ரா மோதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ (எம்.எல்.) ஆகியவையும் களத்தில் இருந்தன. திப்ரா மோதா கட்சி 42 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 28 இடங்களிலும் சிபிஐ (எம்.எல்) 1 இடத்திலும் போட்டியிட்டன.

திரிபுரா தேர்தல் முடிவுகள்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 33 (பாஜக 32, ஐபிஎஃப்டி-1); காங்கிஸ்- சிபிஎம்-ன் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கூட்டணிக்கு 14 இடங்கள் கிடைத்தன. (சிபிஎம் 11, காங்கிரஸ் 3). தனித்துப் போட்டியிட்ட திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களிலும் இதர கட்சிகள் 13 இடங்களிலும் வென்றன. பாஜக கூட்டணிக்கு 40.23% வாக்குகளும் சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணிக்கு 36.01% வாக்குகளும் கிடைத்தன.

பாஜக vs இந்தியா: திரிபுரா தேர்தல் களமானது பாஜக vs இன்றைய காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி என்ற வகையில்தான் இருந்தது. திரிபுரா தேர்தலானது 'இந்தியா' கூட்டணி உருவாவதற்கு முன்னரே நடந்தது. திரிபுரா தேர்தல் முடிவுகளில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் "இந்தியா" கூட்டணி என எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து களம் காண்பது பாஜகவுக்கு ஆகப் பெரும் சவால்தான் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியதுதான் திரிபுரா தேர்தல் முடிவுகள். இதே நிலைமைதான் லோக்சபா தேர்தலிலும் இருக்கக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications