7-வது கட்ட லோக்சபா தேர்தல்: 57 தொகுதிகளில் 904 பேர் போட்டி! 1996-க்குப் பின் அதிக வேட்பாளர்கள்!
டெல்லி: 7-வது மற்றும் இறுதி கட்ட லோக்சபா தேர்தலில் 8 மாநிலங்களின் 57 தொகுதிகளில் 904 பேர் களம் காண்கின்றனர். 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 8,360 வேட்பாளர்கள் தற்போது களம் காண்கின்றனர்.
18-வது லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்டங்களாக முடிவடைந்துள்ளது. 6-வது கட்ட லோக்சபா தேர்தல் வரும் சனிக்கிழமையன்று (மே 25) நடைபெற உள்ளது. 6-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

லோக்சபாதேர்தல் 2024-ன் இறுதி மற்றும் 7-வது கட்ட தேர்தல் ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தக் கட்டத்தில் 57 தொகுதிகளுக்கு மொத்தம் 2,105 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனைக்குப் பின் 954 மனுக்கள் செல்லத்தக்கவையாக ஏற்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தின் 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 328 பேர் பஞ்சாப் தேர்தலில் களம் காண்கின்றனர்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களம் காணும் லோக்சபா தேர்தல் இது.
நாட்டின் முதல் லோக்சபா தேர்தல் 1952-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 489 இடங்களுக்கு 1874 பேர் போட்டியிட்டனர். 1980-ம் ஆண்டு தேர்தலில் 4,629 பேரும் 1984 லோக்சபா தேர்தலில் 5492 பேரும் போட்டியிட்டனர்.
1990களில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகமானது. 1991 லோக்சபா தேர்தலில் 8668 பேர் போட்டியிட்டனர்.
1996 லோக்சபா தேர்தலில் மிக மிக அதிபட்சமாக 13, 952 பேர் களம் கண்டனர். ஆனால் 1999 லோக்சபா தேர்தலில் 5,000க்கும் குறைவான வேட்பாளர்களே போட்டியிட்டிருந்தனர்.
2004-ம் ஆண்டு தேர்தலில் 5435, 2009-ல் 8,070, 2014 தேர்தலில் 8,251, 2019 தேர்தலில் 8,039 பேர் போட்டியிட்டனர். தற்போதைய லோக்சபா தேர்தலில் 8,360 பேர் போட்டியிட்டுள்ளனர். 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதைய தேர்தலிலேயே அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.












Click it and Unblock the Notifications