சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமர்.. ஞாயிற்றுக்கிழமை லீவ்.. வித்தியாசமாக கலாய்த்த அமித்ஷா!
எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தினம் ஒரு பிரதமரை இந்த நாடு சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லி: எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தினம் ஒரு பிரதமரை இந்த நாடு சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
பாஜகவிற்கு எதிராக நிறைய எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து லோக்சபா தேர்தலில் பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. திமுக, காங்கிரஸ் என்று பல எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெரிய கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில் இந்த கூட்டணிக்கு பெரிய வெற்றிவாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. ஒருவேளை இந்த கூட்டணி உருவாகாமல் முத்தரப்பு போட்டி நிலவினால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கூறுகிறார்கள்.
நிறைய பேர்
ஆனால் எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினும், கர்நாடக முதல்வர் குமாரசாமியும் மட்டுமே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
யார்
இந்த கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு போட்டியாக பலர் இருக்கிறார்கள். பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மஜத தேசிய தலைவர் தேவகவுடா ஆகியோரும் இந்த பிரதமர் ரேஸில் இருக்கிறார்கள்.
அமித் ஷா கிண்டல்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தற்போது இதுகுறித்து கிண்டல் செய்துள்ளார். அதில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒரு வலுவில்லாத கூட்டணி. தேர்தலுக்கு பின் அந்த கூட்டணி காணாமல் போய்விடும். தேர்தலில் பாஜகவின் வெற்றியை பார்த்த பின் இந்த கூட்டணி மொத்தமாக காணாமல் போய்விடும். அவர்களிடம் சரியான பிரதமர் வேட்பாளர் கூட இல்லை.
தினம் ஒருவர்
அப்படியே எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தினம் ஒரு பிரதமர் ஆட்சிக்கு வருவார். திங்கள் கிழமை மாயாவதி, செவ்வாய் அகிலேஷ் யாதவ், புதன் மமதா பானர்ஜி, வியாழன் சரத்பவார், வெள்ளி தேவ கவுடா, சனிக்கிழமை ஸ்டாலின் ஆகியோர் ஆட்சிக்கு வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கே விடுமுறை அளிக்க வேண்டியதுதான் என்று அமித் ஷா கிண்டலாக கூறியுள்ளார்.