லோக்சபா தேர்தல்: பாஜக கூட்டணியில் சரணாகதி அடைந்தது குமாரசாமியின் மஜத- டெல்லி சந்திப்பில் பரபர!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேஎடிஎஸ்) கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸும் மஜதவும் இணைந்து போட்டியிட்டன. அத்தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 28 இடங்களில் 25ஐ கைப்பற்றியது. காங்கிரஸ், மஜதவுக்கு தலா 1 இடம்தான் கிடைத்தது. மஜத- காங்கிரஸ் கூட்டணிக்கு இது மிகப் பெரும் தோல்வியாக அமைந்தது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெறும் 19 இடங்களில் மட்டும் வென்றது மதச் சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்). 2018-ம் ஆண்டு தேர்தலில் மஜத மொத்தம் 37 இடங்களில் வென்றிருந்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா வாக்குகள் பெருமளவு காங்கிரஸை நோக்கி திரும்பியது. இதனால் மஜத கட்சியால் அந்த ஜாதி வாக்குகளை அறுவடை செய்ய முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுடன் அந்த கட்சி கை கோர்க்கலாம் என தொடக்கத்தில் பேச்சுகள் எழுந்தன. ஆனால் காங்கிரஸ் இதனை விரும்பவில்லை என கூறப்பட்டது. 2019 லோக்சபா தேர்தல் அனுபவத்தில் காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்தது.

இதனையடுத்து மஜதவுக்கு ஒரே ஒரு போக்கிடமாக இருப்பது பாஜக மட்டும்தான். இருந்த போதும் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் பதவி, மத்திய அமைச்சர் பதவி என பல்வேறு நிபந்தனைகளை பாஜக கூட்டணியில் சேருவதற்கு மஜத தரப்பில் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் மஜத இணைவது தாமதாகி வந்தது.
இந்நிலையில் டெல்லி சென்ற கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 39-வது கட்சியாக குமாரசாமியின் மஜத அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இருதரப்பும் முதன்மையான பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். எங்கள் தரப்பில் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை என விளக்கம் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications