"பெரிய முடிவு.." ஓபிசி பட்டியலில் 80 ஜாதிகள் சேர்ப்பு- முஸ்லிம் ஜாதிகள் எண்ணிக்கை குறைப்பு!
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் 80 ஜாதிகளை ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் - Other Backward Classes பட்டியலில் சேர்க்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசும் லோக்சபா தேர்தலை முன்வைத்து பல்வேறு அரசு சார்ந்த அறிவிப்புகள், நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வின் போது அவர் தெரிவித்த பல கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்து கொண்டிருக்கிறது.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், 2009-ம் ஆண்டு ஓபிசி பட்டியலில் மேற்கு வங்கத்தின் 66 ஜாதிகள் இடம் பெற்றிருந்தன. இதில் 12 முஸ்லிம் ஜாதிகள் இருந்தன. ஆனால் தற்போது மேற்கு வங்கத்தின் 179 ஜாதிகள் ஓபிசி பட்டியலில் உள்ளன. இதில் முஸ்லிம் ஜாதிகள் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. இந்து ஜாதிகள் எண்ணிக்கை வெறும் 61 ஆக மட்டுமே இருக்கிறது. ஓபிசி பட்டியலில் முஸ்லிம் ஜாதிகள் எண்ணிக்கை கிடுகிடுவென எப்படி உயர்ந்தது? இப்போது நான் இருப்பது மேற்கு வங்கத்திலா? வங்கதேசத்திலா? என்பதுதான் குழப்பமாக இருக்கிறது என்றார்.
மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் மக்கள் தொகை 70%; இஸ்லாமியர்கள் மக்கள் தொகை 27%தான் என்கிறது மாநில அரசு. அப்புறம் எப்படி அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் ஜாதிகள் ஓபிசி பட்டியலில் இடம்பெற முடியும்? இவை அனைத்துமே தவறாக ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மண்டல் கமிஷன் அறிக்கையிலும் கூட இப்படி இருந்தது இல்லை. தவறாக சேர்க்கப்பட்ட முஸ்லிம் ஜாதிகள், ஓபிசி பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்தார்.
இதனிடையே தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஓபிசி பட்டியலில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 80 ஜாதிகள் புதியதாக சேர்க்கப்படும். மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து இந்த கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த 80 ஜாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது என்றும் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் கூறினார்.












Click it and Unblock the Notifications