நீட் தேர்வில் மாபெரும் மோசடி.. ரூ 50 லட்சத்திற்கு ஆள்மாறாட்டம்.. சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த கோச்சிங் நிறுவனம் ஒன்று நீட் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் ரூபாய் 50 லட்சம் வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மருத்து படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளதை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கண்டுபிடித்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மாபெரும்
இது தொடர்பாக ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம், அதன் இயக்குநர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் பல மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடம் இருந்தும் 50 லட்ச ரூபாய் வரை கல்வி நிறுவனம் வசூலித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில், "பரிமல் கோட்பள்ளிவார் மோசடியான வழிகளைப் பின்பற்றி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கிறார். இதற்காக மாணவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பெரும் பணத்தையும் பெறுகின்றன. பின்னர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடத்தப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ 50 லட்சம்
இதில் ஒப்புக்கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து காசோலைகள், மாணவரின் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கோச்சிங் சென்டர் வாங்கி வைத்துக்கொள்கிறது. மாணவரின் பெற்றோர் ரூ 50 லட்சத்தை அளித்த பின்னரே மதிப்பெண் சான்றிதழ் திரும்ப அளிக்கப்படுகிறது. சிபிஐ எஃஐஆரில் மேலும், "கோச்சிங் சென்டரில் இருப்பவர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.
எப்படி நடந்தது
ஆள் மாறாட்டம் செய்ய ஏதுவாக மாணவர்களின் விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர். மாணவர்களின் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்களுக்கு விடை குறித்த தகவல்களை அளிப்பதாகவும் கோச்சிங் சென்டர் உறுதி அளித்திருந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் ஐந்து மாணவர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்ய கோச்சிங் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க சிபிஐ அந்த தேர்வு மையங்களில் காத்திருந்தது. இருப்பினும், இந்த தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட கோச்சிங் நிறுவனம், அவர்களைத் தேர்வு எழுத மையங்களுக்கு அனுப்பவில்லை. இது தொடர்பாக இன்று கோச்சிங் சென்டரில் அதிரடி சோதனை செய்த சிபிஐ பலரைக் கைது செய்துள்ளது.
மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்கள் மீதும் சிபிஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. சதி, மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய இருந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கியது தெரிய வந்துள்ளது. நீட் காரணமாகப் பல மாணவர்கள் தற்கொலை செய்து வரும் நிலையில், சிபிஐ அமைப்பின் இந்த அக்ஷன் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.