ஹிஜாப் விவகாரம்: முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்.. மலாலா ஆவேசம்!
டெல்லி: கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் குரல் கொடுத்துள்ளார். .
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதற்கு எதிராக சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பெரும் எதிர்பார்ப்பு.. ஹிஜாப் என்பது அடிப்படை உரிமையா? கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஹிஜாப் விவகாரம்
கடந்த ஆண்டு இறுதியில் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ''ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை. இதனை யாரும் தடுக்க முடியாது'' என்று அவர்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர்.
அதிரடி உத்தரவிட்ட கர்நாடக அரசு
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், ''நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம்'' என்று கூறி சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர். இதனால் கர்நாடகா முழுவதும் பதற்றம் நிலவியதால் கல்வி நிறுவனங்களில் அமைதி, நல்லிணக்கம், சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதாவது மாணவ-மாணவிகள் பொதுவான சீருடை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு ஆதரவு குரல்
நேற்று ஒரு மாணவி ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மாணவிகளுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் ஆதரவு குரல் வந்துள்ளது.
மலாலா கருத்து
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ''கல்லூரிகள் படிப்பு முக்கியமா ஹிஜாப் முக்கியமா என்று தேர்வு செய்ய எங்களை கட்டாயப்படுத்துகின்றன. ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது.இது மிகவும் கொடுமையானது. பெண்களின் புறக்கணிப்பு தொடர்கிறது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.
மலாலாவுக்கு பாஜக தேசிய செயலாளர் பதிலடி
'இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இவர் யார்?' என்று மலாலா யூசுஃப்சாய் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி பதிலடி கொடுத்துள்ளார். இதேபோல் மலாலாவுக்கு ஆதாரவாக ஒரு சிலரும், அவருக்கு எதிராக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.