நெருங்கிவரும் காங்கிரஸ்..தேசியளவில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி..மம்தாவின் அட்டகாசமான வியூகம்
டெல்லி: வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் தேசியளவில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி கட்டமைக்கும் முயற்சிகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சத்தமில்லாமல் தொடங்கிவிட்டார்.
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் தொடங்கி குஜராத், பஞ்சாப் என ஏழு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து ஆறு மாநிலங்களிலும் பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.
தேசியளவில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியை அமைக்க பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள் - தீர்த்தக்கிணறுகளை திறக்க கோரிக்கை
எங்கே தொடங்கியது
கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அமித் ஷா, ராஜ்நாத் சிங் என அனைத்து முக்கிய பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டிருந்தனர். இருந்தாலும்கூட அங்கு பாஜகவால் வெறும் 77 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
மம்தா கடிதம்
213 தொகுதிகளில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சுவேந்து அதிகாரி தொடங்கிப் பல முக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அப்படியே பாஜகவுக்குத் தாவினர். அப்போதே காங்கிரஸ், திமுக உட்பட நாடு முழுவதும் உள்ள 15 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
ஒரே அணியில் திரள்வோம்
அந்த கடிதத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு எந்தவொரு காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளையும் பாஜக ஒடுக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் ஒன்று சேர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக, மேற்கு வங்க சட்டசபை சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தேசியளவில் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
கூட்டணி
அதைத் தொடர்ந்து மே மாதம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 3ஆவது முறையாக ஆட்சி அமைத்தது. அப்போது நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்ததால், அனைத்து கட்சிகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தின. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் மம்தா தீவிரமாக இறங்கியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் மூத்த அரசியல்வாதியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து இருந்தார். அதேபோல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரையும் கடந்த சில வாரங்களுக்கு முன் நேரில் சந்தித்து இருந்தார்.
மம்தா பானர்ஜி
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க மம்தா பானர்ஜி வரும் நாட்களில் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்திக்கவுள்ளார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக உருவாகும் கூட்டணியின் தொடக்கமாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது குறித்து மம்தா கூறுகையில், "ஒரு நோயாளி செத்த பிறகு அவருக்குச் சிகிச்சை அளிக்க முடியாது. எனவே இது தான் நமக்கான நேரம். வரும் 2024 தேர்தலுக்கான பணிகளை இப்போது தொடங்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
தேசியளவில் கூட்டணி
பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணியை அமைத்து, வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் வரை அந்தக் கூட்டணி ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்பதே மம்தாவின் விருப்பமாக உள்ளது. இத்திட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சியும் ரெடியாக உள்ளதாகவே தெரிகிறது. எனவே, வரும் வாரங்களில் தேசியளவில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணியை திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கி வைக்க வாய்ப்புகள் அதிகம்..!