நாகாலாந்து: 13 பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை- ராகுல், மமதா கடும் கண்டனம்
டெல்லி: நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உண்மையான விளக்கத்தை தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் ராகுல் காந்தி.
நாகாலாந்து மாநிலத்தில் மியான்மர் எல்லையை ஒட்டியது மோன் மாவட்டம். இம்மாவட்டத்தின் ஓடிங் பகுதியில் சொந்த ஊர் திரும்புவதற்காக நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் கூட்டமாக சாலையில் காத்திருந்தனர்.
அப்போது அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்புப் படையினர் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என சந்தேகித்து தாக்குதல் நடத்தியது. பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பொதுமக்கள் ஆவேசம்
பின்னர்தான் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் உறுதியானது. இச்சம்பவத்தால் கொந்தளித்துப் போன மோன் மாவட்ட நாக பழங்குடி மக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஜவான் ஒருவர் உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினரது வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

விசாரணைக்கு
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நாகாலாந்து முதல்வர். மேலும் இத்தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அத்துடன் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி கண்டனம்
நாகாலாந்தில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், நாகாலாந்து சம்பவம் நெஞ்சை உலுக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு உண்மையான விளக்கத்தைத் தர வேண்டும். நமது நாட்டின் சொந்த நிலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய உள்துறை அமைச்சகம் என்னதான் செய்து கொண்டிருந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணை தேவை- மமதா
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில், நாகாலாந்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இதில் படுகாயமடைந்த பொதுமக்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உரிய நீதியைப் பெறும் வகையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications