அரவிந்த் கெஜ்ரிவால் மீது திடீரென தண்ணீரை ஊற்றிய நபரால் பரபரப்பு! சுற்றி வளைத்த போலீஸ்! என்ன நடந்தது?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது தண்ணீர் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கெஜ்ரிவால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். கெஜ்ரிவால் மீது திரவம் ஊற்றப்பட்டதும் என்னமோ ஏதோ என தொண்டர்களும் பயந்து போகினர். இதனால், அங்கு பரபரப்பு தொற்றியது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி முதல்வராக உள்ளார். அடுத்த ஆண்டு டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் திட்டத்துடன் கெஜ்ரிவால் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், டெல்லியில் பாதயாத்திரையை கெஜ்ரிவால் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள மால்வியா நகர் அருகே கெஜ்ரிவால் இன்று பாதயாத்திரையாக சென்றார். கெஜ்ரிவாலுடன் அவரது கட்சியினரும் உடன் சென்றனர். ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கெஜ்ரிவால் மீது திடீரென்று தண்ணீரை வீசினார். இதை சற்றும் எதிர்பாராத கெஜ்ரிவால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார்.
கெஜ்ரிவால் மீது திரவம் ஊற்றப்பட்டதும் என்னமோ ஏதோ என தொண்டர்களும் பயந்து போகினர். இதனால், அங்கு பரபரப்பு தொற்றியது. எனினும், வெறும் தண்ணீர்தான் ஊற்றப்பட்டது என்பதை அறிந்ததும் சற்று பரபரப்பு குறைந்தது. தண்ணீரை ஊற்றிய நபரை அங்கிருந்த கட்சியினர் பிடித்து தாக்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
கெஜ்ரிவால் மீது தண்ணீரை ஊற்றிய நபரின் பெயர் அசோக் ஜா என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். எனினும், இதனை மறுத்த பாஜக, டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்றும், சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, கெஜ்ரிவால் பழைய யுக்தியை கையாண்டு இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு அரசியல் யுக்தியும் தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக மை வீசுவது, கன்னத்தில் அறைந்தது போன்ற பழைய யுக்தியை மீண்டும் கையாண்டுள்ளார். டெல்லி போலீசார், இந்த சம்பவத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், முன்னாள் முதல்வருக்கே டெல்லியில் பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் காவல்துறை மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ளது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications