எரியும் மணிப்பூர்: முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய 13 சிவில் அமைப்புகள் கெடு
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறை நீடித்து வரும் நிலையில் முதல்வர் பைரேன் சிங் உட்பட 50 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று 13 பொதுமக்கள் அமைப்புகள் கெடு விதித்துள்ளதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் 6 மைத்தேயி இனக்குழுவினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகள் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் 13 பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன.
மணிப்பூரில் 2 ஆண்டுகளாக மைத்தேயி- குக்கி இன மக்களிடையே தொடர் மோதல் நிகழ்ந்து வருகிறது. தற்போது குக்கி இன மக்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். குக்கி இன மக்களுக்கு தனி நிர்வாக அமைப்பை உருவாக்க கோருகின்றனர். இந்த மோதல்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் மைத்தேயி இனக்குழுவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகளை மைத்தேயி இன மக்கள் தாக்கி தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 13 பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து மக்கள் கிளர்ச்சி ஓயாத நிலையில் அர்சியல் ரீதியாக தீர்வு காண முடியாததால் முதல்வர் பைரேன் சிங் உட்பட 50 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என கெடு விதித்துள்ளனர். இந்த பொதுமக்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான சந்தா நஹாக்பம், குக்கி ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட மைத்தேயி பெண்கள், குழந்தைகளை மணிப்பூர் அரசால் உயிரோடு மீட்க முடியவில்லை. அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கையாலாகாத அரசாகவே இருந்துவிட்டது. இதனால்தான் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் மற்றும் 50 எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்தாக வேண்டும். அதுவரை பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications