தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?.. ராஜ்யசபாவை கிடுகிடுக்க வைத்த வைகோ கர்ஜனை!
டெல்லி: எங்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா? இந்திய குடிமக்களாக தமிழ்நாட்டு மீனவர்களை மத்திய அரசு கருதினால் அவர்களைப் பாதுகாக்க என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது? என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி எழுப்பிய உடன் வைகோவுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாக கூறி மைக் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆனாலு மைக் இணைப்பு இல்லாமல் சில நிமிடங்கள் ஆவேசமாக ராஜ்யசபாவில் பேசினார் வைகோ.
ராஜ்யசபா இன்று காலை கூடிய போது உறுப்பினர்கள் பிரச்சனைகளை குறித்து பேசினர். அப்போது வைகோ மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியதாவது: தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது, இன்றைக்கும் கூட 22 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

2014-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது நமது இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இன்றைய போட்டியில் இலங்கை தோற்றுவிட்டால் உங்கள் தலைகளை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் போட்டியில் இலங்கை தோற்றுப் போனது. அன்றே தமிழ்நாட்டு மீனவர்களை கொலை செய்து தலையை துண்டித்தது இலங்கை கடற்படை. இதுவரை இலங்கை கடற்படையால் 878 தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.
கடந்த வாரம் கூட தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கி கொலை செய்தது இலங்கை கடற்படை. தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது, நிலைமையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கிறோம்; கவலை வேண்டாம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்பது நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் குடிமக்கள்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்கள் கடற்படை என்ன செய்து கொண்டிருந்தது? இவ்வாறு வைகோ பேசினார். வைகோ தமது பேச்சை முடிக்கும் முன்னரே அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும் வைகோ சில நிமிடங்கள் தொடர்ந்து தமது கருத்தை முன்வைத்தார். இந்த கருத்துகள் சபைக் குறிப்பில் இடம் பெறாது என சபை தலைவர் தெரிவித்தார். இதனால் ராஜ்யசபாவில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications