97 கிமீ காட்டு பாதை.. அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய மக்கள் எடுத்த பகீர் ரிஸ்க் தெரியுமா
டெல்லி: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய 97 கிமீ ஆபத்து நிறைந்த காட்டு பாதையில் பயணிக்க வேண்டும். மலைகள், வனவிலங்குகள், வழிப்பறி கொள்ளையர்கள் என்று கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி போல அந்தப் பாதை திக் திக் அனுபவத்தை கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ளார். டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி அறிவிப்புகளும், அதை ஒட்டிய சர்ச்சைகளும் என்று உலகமே பரபரப்பான நிலைக்கு மாறியுள்ளது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறார்கள்.

முதல்கட்டமாக கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து கொண்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் வந்தனர். இந்தியர்கள் மீதான இந்த நடவடிக்கை நாடாளுமன்றம் வரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது மிகவும் ஆபத்தான பாதை. இந்த பாதையில் பயணித்து பல நாடுகளை கடந்துதான் அமெரிக்கா செல்ல முடியும். அதிலும் அதிக ஆபத்து நிறைந்த கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள டேரியன் கேப் என்கிற சதுப்பு நிலக்காட்டை கடக்க வேண்டும்.
சாலையே இல்லாத அந்தப் பாதையில் சுமார் 97கிமீ தூரம் உயிரை பணயம் வைத்து செல்ல வேண்டுமாம். மழைக்காடுகள், சதுப்பு நிலம், மலைகள் என்று உலகளவில் அந்தப் பாதை மிகவும் ஆபத்து நிறைந்தது. பரந்து விரிந்த அமெரிக்கா நெடுஞ்சாலையில் அலாஸ்காவில் இருந்து அர்ஜென்டினா வரையிலான இதன் வடிவமைப்பு மிகவும் ஆபத்தானது.
கரடு முரடான நிலப்பரப்பு, மாறுபடும் தட்பவெப்பம், போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது போன்றவற்றால் அந்த பகுதிக்கு செல்வதையே தவிர்ப்பார்கள். இதனால் அமெரிக்காவுக்குள் சட்டவிரோமாக நுழைய வேண்டும் என்று நினைப்போருக்கு இந்த பாதை தான் ஆஸ்தான நுழைவு வாயிலாக உள்ளது. செங்குத்தான மலைகள், சேறும் சகதியுமான சதுப்பு நிலம், ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், வனவிலங்குகள் என்று திரும்பிய பக்கம் எல்லாம் ஆபத்து மட்டுமே நிறைந்திருக்கும்.
அந்த காட்டில் சிறுத்தைகள், பாம்புகள், ஏராளமான விஷ பூச்சிகள் உள்ளன. மேலும் அங்கு உள்ளூர் ரவுடிகள், வழிப்பறி கும்பல் ஆகியோரும் ஆயுதங்களுடன் மறைந்திருப்பார்கள். அவர்கள் மூலம் பணம், உடைமைகளை இழப்பது, தாக்குதலுக்கு உள்ளாவது போன்ற சம்பவங்களும் நடைபெறும். அந்த வழியாக செல்லும் இந்தியர்கள் இதனை டாங்கி ரூட் (Donkey Route) என்றும அழைப்பார்கள்.
இந்ந பாதை வழியாக மத்திய அமெரிக்க நாடுகளான பனாமா, கோஸ்டாரிகா, எல் சல்வடார் நாடுகளுக்கு சென்று அங்கிருந்து மெக்ஸிகோ சென்று பிறகு அமெரிக்காவுக்குள் நுழையலாம். இந்தப் பாதையில் பயணிப்பதற்காக உள்ளூர் சட்டவிரோத கும்பல் பல ஆயிரம் டாலர் கட்டணமாக வாங்கி அமெரிக்காவுக்குள் நுழைய உதவுகிறார்கள்.
விசா நடைமுறைகள் மிகவும் கடினமாகியிருப்பதால் பலரும் இந்த வழியை பயன்படுத்துகிறார்கள். உள்ளூரில் சில மாஃபியாக்கள், திருடர்கள் இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பாதுகாப்பாக அமெரிக்காவில் விடுவதாக சொல்லி தாக்கிவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். 2023 ஆம் ஆண்டு இந்த பாதையை 5.2 லட்சம் பேர் கடந்து சென்று புலம் பெயர்ந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு 3 லட்சம் பேர் கடந்துள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அந்த வழியாக செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் மக்களே அந்த பாதையில் பயணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயல்களில் மூலம் ஒரு மாஃபியா கும்பல் 2023 ஆம் ஆண்டு மட்டுமே 57 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications