மற்றொரு ‘தேர்தல் வாக்குறுதி’.. ரெடியாகும் அரசு - அமைச்சர் சக்கரபாணி சொன்ன இனிப்பான செய்தி
டெல்லி: திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாட்டில் பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆட்சியை பிடித்த திமுக தேர்தல் அறிக்கையில் பேரூராட்சி பகுதிகளில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
டான்ஸ் ஆடுங்க! கோரஸாக குரல் எழுப்பிய கிராமமக்கள்! திருவிழாவில் ஆட்டம் போட்ட அமைச்சர் சக்கரபாணி!
கலைஞர் உணவகம்
இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் உணவுத்துறைகாக ரூ.2,000 கோடி மானியத் தொகையை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டோம். தேர்தலில் வாக்குறுதி அளித்ததைபோல், பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்." என்றார்.
அம்மா உணவகம்
கடந்த நவம்பர் மாதம், தேசிய மாதிரி சமுதாய சமையல் கூட திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை 'அம்மா உணவகம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உளளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது.
விலை பட்டியல்
இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் ( சாம்பார் கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம் ) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன. 2021 ஜூன் முதல் நவம்பர் வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயனடைந்துள்ளனர்.
பேரிடர் காலங்கள்
கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதே போன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கபட உள்ளன. இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22ம் நிதியாண்டில் 3227 மெட்ரிக் டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு செலவு?
ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 ன் கீழ் 100 விழுக்காடு நிதி உதவி வழங்கிட வேண்டும்." என்று கூறி இருந்தார்.