அமைச்சர் செந்தில் பாலாஜி காலைச் சுற்றிய வழக்கு.. அன்று பதவி ‘காலி’.. 2015 முதல் இதுவரை நடந்தது என்ன?
டெல்லி : போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ல் எழுந்த புகார் தொடர்பாக 2018ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது முதல் தற்போது வரையிலான இந்த வழக்கின் டைம்லைனை பார்க்கலாம்.
2015 : தற்போதைய தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது செந்தில் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, 2015ல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் செந்தில்பாலாஜி.
2018 : போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2018 : செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர்.
2018 : இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி.
2018 : அருள்மணி, முத்தையா, முருகேசன், வேணுகோபால், குமார், சரவணன், வேலாயுதம், அம்பேத்கர், முத்தரசு, ஜெயகுமார், விஜயகாந்த், முருகன், சதிஷ், ஐயப்பன் ஆகிய 14 பேரின் பெயர்கள் பாதிக்கப்பட்டவர்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2018 : இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. எனவே சரியான முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2018 : இதையடுத்து இந்த விவகாரத்தை சரியாக விசாரித்து 6 மாதத்துக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2018 : அதன் பிறகு செந்தில் பாலாஜியின் கரூர் இல்லம், அவரது சகோதரர் இல்லம் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பிறகு இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
2018 : சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்த மூன்று வழக்குகளும் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
2021 : இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கு தொடர்ந்தவரும், மூன்றாவது குற்றவாளியுமான சண்முகம் தங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகச் சொன்னதை அடுத்து 2021-ஆம் ஆண்டில் அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021 : இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ததுடன், தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
2021 ஜூலை : இதற்கிடையே சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
2021 : அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க முடியாது எனக்கூறிய நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

2021 : அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது.
2022 : அமலாக்கத்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு, வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு 2022, ஏப்ரல் 29-ஆம் தேதி சம்மன் அனுப்பியது.
2023 : செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையின் வாதங்களை எதிர்த்து வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
2023 மே 5 : இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
2023 மே 5 : மேலும், செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications