Netflix Mission Majnu:இந்திய ரா உளவாளிகளை பாகிஸ்தானிடம் போட்டு கொடுத்த மொரார்ஜி தேசாய்? புது சர்ச்சை
டெல்லி: Netflix OTT தளத்தில் வெளியாகி இருக்கும் Mission Majnu திரைப்படத்தில் நாட்டின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தானில் நமது நாட்டின் ரா உளவாளிகள் காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்யப்படுவதாக காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
Mission Majnu திரைப்படமானது பாகிஸ்தானின் அணு குண்டு தயாரிப்பு சோதனையை இந்திய ரா உளவாளிகள் கண்டுபிடிப்பது தொடர்பானது. 1974-ம் ஆண்டு இந்தியா முதன் முதலாக அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானும் அணு குண்டு சோதனை முயற்சியில் இறங்கியது. இதுதான் Mission Majnu திரைப்படத்தின் பின்களம். 1970கள் தொடங்கி 1980கள் வரையிலான காலகட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ரா எனப்படும் இந்திய உளவு அமைப்பின் தலைவர் R.N.Kao , பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ, ராணுவ தளபதி ஜியா உல் ஹக், பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை ஏகே கான் ஆகியோரை மையப்படுத்தி இந்த திரைப்பட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் பொக்ரான் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து ஏகே கானை வரவழைக்கிறார் பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஜுல்ஃபிகர் அலி பூட்டோ. அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்தவர் ஜியா உல் ஹக். பாகிஸ்தானின் கதுவா என்ற இடத்தில் ரகசியமாக அணுகுண்டு தயாரிப்பு நடவடிக்கையை ஏகே கான் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய ரா உளவாளிகளை களமிறக்கினார் ஆர்.என்.காவ்.
கதுவாவில் அணுகுண்டு சோதனைக்கான முயற்சிகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி இருந்த காலம். பிரதமர் பூட்டோ கைது செய்யப்பட்டு ராணுவ ஆட்சியை ஜியா உல் ஹக் கையில் எடுத்த தருணம். இந்தியாவில் இந்திரா காந்தி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பிரதமரானார் மொரார்ஜி தேசாய்.
அப்போது ஜியா உல் ஹக்- மொரார்ஜி தேசாய் இடையே நல்லுறவு இருந்து வந்தது. மேலும் இந்தியாவின் ரா உளவு அமைப்பு மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தார் மொரார்ஜி தேசாய். இதனால் ராவின் நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைத்தார். அப்போது ஆர்.என்.காவ் தமது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் பாகிஸ்தானின் அணுகுண்டு சோதனை முயற்சி நடைபெறும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆபரேஷனை ரா உளவாளிகள் மூலம் தொடர்ந்தா காவ்.
ஒருகட்டத்தில் கதுவா என்ற இடத்தில் அணுகுண்டு தயாரிப்பு நடைபெறுவதை ரா உளவாளிகள் உயிரை பணயம் வைத்து கண்டுபிடிக்கின்றனர். இந்த தகவல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்க்கு தெரிவிக்கப்படுகிறது. அப்போது ரா அமைப்பு மீது அதிருப்தி அடைந்திருந்தாலும், பாகிஸ்தான் ராணுவ ஆட்சி அதிபரான ஜியா உல் ஹக்கை தொடர்பு கொண்டு, கதுவாவில் அணு ஆயுத தயாரிப்பு முயற்சி நடைபெறுவதை கண்டுபிடித்ததை தெரிவிக்கிறார் மொரார்ஜி தேசாய். இதனால் கோபம் அடையும் ஜியா உல் ஹக்- சந்தேகத்துக்குரிய இந்திய ரா உளவாளிகளை தேடி தேடி சுட்டுக் கொல்கிறார். இதுதான் Mission Majnu படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள்.
மொரார்ஜி தேசாய், ஜியா உல் ஹக்கை தொடர்பு கொண்டு அணு ஆயுத தயாரிப்பு இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக சொல்லாமல் இருந்திருந்தால் ரா உளவாளிகள் பலர் கொல்லப்படாமல் உயிரோடு இருந்திருப்பார்கள்; மொரார்ஜி தேசாய்தான் காட்டி கொடுத்தார் என்பதை Mission Majnu வெளிப்படுத்துகிறது என்கிறது ஒருதரப்பு. மேலும் இதனாலேயே பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயரிய விருது பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையும் மொரார்ஜிக்கு கிடைத்திருக்கிறது என்கிறது. சமூக வலைதளங்களில் இப்போது Mission Majnu விவாதப் பொருளாகி இருக்கிறது.