ரேஷன் கடையில் பொங்கிய நிர்மலா சீதாராமன்.. சு.சாமிக்கு வந்த கோபம்.. ஒரே வார்த்தையில் நறுக் ட்வீட்
டெல்லி: தெலங்கானாவின் காமாரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விதம் குறித்து பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
"முதல்வன்" படத்தில் நாயகன் அர்ஜூன் ஒருநாள் முதல்வராக பொறுப்பேற்ற பின், ரேசன் கடையில் நடைபெறும் முறைகேட்டை தட்டி கேட்பதற்காக திடீர் சோதனையில் ஈடுபடுவார். மக்களுக்கான ரேசன் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்பட வேண்டும் என்ற முறையில், அர்ஜூன் எடுக்கும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாராட்டை பெறும்.
அதுபோல் நேற்று திடீரென மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரேசன் கடைக்குள் சென்று பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா, பொருட்களின் தரம் எப்படி உள்ளது என்று கேட்பதற்கு முன், பிரதமர் மோடியின் புகைப்படம் எங்கே என்று மாவட்ட ஆட்சியரிடம் பொங்கியுள்ளார். மத்திய அமைச்சர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் இவ்வாறு நடந்துகொண்ட விதம் குறித்து தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
பிரதமர் மோடி படம் எங்கே? ரேஷன் கடை ஆய்வில் கலெக்டரை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன்! பரபர தெலுங்கானா
நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம்
பாஜக சார்பாக சார்பில் மக்களவை சுற்றுப்பயணத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக தெலுங்கானா மாநிலம் ஜகீராபாத் மக்களவை தொகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ரேசன் கடையில் ஆய்வு
அப்போது காமாரெட்டி மாவட்டம் பிர்குர் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்ற அவர், அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாததால் கோபமடைந்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், வெளி சந்தையில் கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்யப்படும் அரிசி, இங்கு கிலோ ரூ.1க்கு வழங்கப்படுகிறது. இதில் போக்குவரத்து, சேமிப்பு உள்ளிட்ட செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ரூ.35 மதிப்புள்ள அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு? மாநில அரசின் பங்கு எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினார்.
மோடியின் படம் எங்கே?
தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு பயனாளிக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக அளித்து வந்தது. இப்போது, ரூ.35 அரிசியில் சுமார் ரூ.30 மத்திய அரசும், ரூ.4 மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், ரேசன் கடையில் பிரதமர் மோடி புகைப்படத்தை ஏன் வைக்கவில்லை என்று ஆவேசமாக பேசினார்.
நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
இதன்பின்னர் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வந்தபோது, அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது மீண்டும் எங்கள் தொண்டர்கள் வந்து பிரதமரின் பேனரை வைப்பார்கள். மாவட்ட ஆட்சியர் என்ற முறையில், அது அகற்றப்படாமலும், கிழிக்கப்படாமலும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு பேனர் இல்லாவிட்டால், நான் மீண்டும் வருவேன் என்று நிர்மலா சீதாராமன் எச்சரித்தார்.
சுப்ரமணியன் சுவாமி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கைகள் சரியா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தெலங்கானாவில் மாவட்ட ஆட்சியரிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது. ரேசன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது குறித்து புகார் தெரிவித்து, பொது விநியோகத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.