அடையாளத்தை இழந்துவிட்டது அதிமுக.. அது ஒரு கட்சியே இல்லை, பாஜகவின் பி அணி.. கனிமொழி சிவியர் அட்டாக்!
டெல்லி: ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக அதன் அடையாளத்தை இழந்துவிட்டது. எனவே அது ஒரு கட்சி அல்ல, பாஜகவின் பி அணி என கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது திமுகவின் சாய்ஸ். அதற்காக எங்கள் கருத்துடன் அனைவரும் ஒத்து போக வேண்டும், எங்கள் முடிவோடு ஒத்து போக வேண்டும் என நாங்கள் கூறவில்லை.
மேலும் எங்கள் சார்பில் ராகுலுக்கு பதில் வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும் அதை நாங்கள் எதிர்க்கப் போவதில்லை. ரஜினிகாந்த் இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அவரது திட்டம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை.
விருப்பம்
கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்டார். பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் கனிமொழி. மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு அவர் கூறுகையில் எது குறித்து என்னால் இப்போது எதையும் கூறுமுடியாது. இது அப்போது நடைபெறும் சூழலை பொறுத்தும், திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் விருப்பத்தை பொறுத்தும் அமையும்.
பி அணி
காங்கிரஸுடன் திமுக கூட்டணி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனினும் தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் எடுக்க முறையான பேச்சுவார்த்தை இன்னும் எடுக்கப்படவில்லை. அந்த பேச்சுவார்த்தை இப்போதே நடத்த வேண்டும் என்பதில்லை. ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுக அதன் அடையாளத்தை இழந்துவிட்டது. பாஜகவின் பி அணியாக அதிமுக மாறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். அடையாளத்தை இழந்ததால் அதை ஒரு கட்சியாக நான் கருதவில்லை. எனவே அதிமுக குறித்து தற்போது நான் எதையும் பேச முடியாது.
ஆ ராசா
தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. எனினும் அது கட்சி தலைமைதான் முடிவு செய்யும். 2ஜி அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர் ஆ.ராசா. அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது முற்றிலும் தலைமையின் கையில் உள்ளது.
பெண்கள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடி அரசியலுக்கு வருவது என்பது நல்ல விஷயம்தான். அரசியலுக்கு நிறைய பெண்கள் வர வேண்டும். அவர் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணியாற்றியுள்ளார். விவசாயிகள் குறித்து மத்திய அரசுக்கு உண்மையிலேயே கவலை இருந்திருந்தால் அதை ஏன் இத்தனை ஆண்டுகளில் செய்யாமல் தற்போது இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளை வழங்க வேண்டும்?
மத்திய அரசு
தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. டெல்லியில் மிகப் பெரிய பேரணியை விவசாயிகள் நடத்தினர். தமிழகத்திலிருந்து டெல்லிக்கு வந்த விவசாயிகள், பிரதமரின் கவனத்தை பெற வெட்ட வெளியில் எத்தனையோ போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஒரு நிமிடம் கூட அவரை பிரதமர் அழைத்து பேசவில்லை. வேலையின்மையை போக்க மத்திய அரசு என்ன செய்தது?
வாக்களித்ததை செய்யவில்லை
இடைக்கால பட்ஜெட் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் வாக்களித்தபடி எதையும் செய்வதில்லை என்று கனிமொழி குற்றம்சாட்டினார்.