முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்படும்- டிச.10-க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் இறுதி விசாரணைகள் விரைவாக நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம், கேரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
கேரளா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கண்காணிப்பு குழு விசாரித்து வருகிறது. தற்போதைய நிலையில் அவசர உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்பட தேவை இல்லை என்றார். தமிழக அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவும் உடனடியான உத்தரவுகள் எதுவும் தற்போது தேவை இல்லை. இறுதி விசாரணையை தொடங்கலாம் என்றார். இதேபோல் மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், இறுதி கட்ட விசாரணைகள் விரைவாக நடத்தப்படும். தமிழகம், கேரளா தரப்பு தங்களது வாதங்களை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரளா அரசைப் பொறுத்தவரையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்கவும் கேரளா எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் தமிழக அரசோ, இதுவரையிலான பல்வேறு ஆய்வுக் குழுக்களின் முடிவுகளை சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு அணை பலமானதாகவே இருக்கிறது. 142 அடிக்கு நீரை தேக்கலாம் என வாதிட்டு வருகிறது.
ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு!
அத்துடன் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரளா அரசுதான் பொய் பிரசாரம் செய்து வருகிறது எனவும் தமிழகம் குற்றம்சாட்டி இருக்கிறது. ஆனாலும் கேரளா அரசு இடைவிடாமல், 126 ஆண்டுகள் பழமையானது முல்லைப் பெரியாறு அணை. அதிக அளவு நீரை தேக்கினால் கூடுதல் அழுத்தத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படும். 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என வாதிடுகிறது.