முல்லை பெரியாறு அணை .. வேண்டாத வேலை பார்க்கும் கேரளா.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..
டெல்லி: தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி ஆகும். தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது.
முல்லை பெரியாறு அணையில் தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு கூறி வரும் நிலையில் கேரள இதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

முல்லை பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை மிகவும் பழமையான அணை. 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் உயிரிழந்து விடுவார்கள் என்று கேரளா தொடர்ந்து கட்டுக்கதைகளை கூறி வருகிறது. முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று தற்போது கேரளவாசிகள் சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். பிரித்விராஜ் உள்ளிட்ட சில மலையாள நடிகர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள்ளனர்.

பாதுகாப்பு குழு
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய மூவர் குழு மற்றும் ஐவர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இரு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த குழுவினர் அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அளித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பியும் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்சநீதிமன்றம்
கேரளாவில் கன மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு நீர் தேக்க அளவு விவகாரத்தில், தற்போதைய நிலையில் அணையின் நீரின் அளவை குறைக்க தேவையில்லை என்று கூறியது.

மக்கள் பெரும் அச்சம்
கேரளா தரப்பில், ' முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2017, 2018 ஆண்டுகளில் முல்லை பெரியாறு அணையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, எனவே தற்போது 139 அடி நீரை மட்டுமே தேக்க உத்தரவிட வேண்டும். அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை முழுமையாக கேரளாவின் வசம் ஒப்படைக்க வேண்டும்' என்று வாதம் வைக்கப்பட்டது.

விசாரிக்க தேவையில்லை
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, 'முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவு 137 அடியாக தான் இருக்கிறது. தற்போது மழை பொழிவும் அந்த பகுதியில் இல்லாததால் தற்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் விசாரிக்க தேவையில்லை மேலும் 142 அடியாக நீரை தேக்கினாலும் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானதுதான் என பல ஆய்வுகள் மூலமாக ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, எனவே இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கக் கூடாது' என தெரிவிக்கப்பட்டது.

அவசரமில்லை
அப்போது நீதிபதிகள், 'தற்போது முல்லை பெரியாறு அணையின் நீரின் அளவு 137 அடியாகதான் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அவசரமில்லை . அணையில் தற்போதைய நீர் தேக்கம் விவகாரம் குறித்த மத்திய நீர் வளத்துறையின் முடிவு தொடர்பாக மனுதாரர் மற்றும் கேரள அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும்[ எனக்கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications