தேசிய ஹெல்த் மிஷன் திட்டம்.. மோடி அதிரடி அறிவிப்பு.. அனைவருக்கும் ஹெல்த் ஐடி கார்டு வழங்கப்படும்
டெல்லி: தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்துள்ளார். இதற்கான அறிவிப்பை சுதந்திர தின உரையில் அவர் வெளியிட்டார்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை வெவ்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
இன்று முதல் நமது நாடு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷனை நான் இன்று துவக்கி வைக்கிறேன். மருத்துவத் துறையில் இது புரட்சிகர திட்டமாகும்.
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.. அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை- மோடி
மருத்துவ அட்டை பலன்
தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் சுகாதார அடையாள அட்டைகளை பெறுவார்கள். ஒவ்வொரு முறை, மருத்துவரையோ, அல்லது மருந்தகங்களையோ நீங்கள் அணுகும்போது, பதிவு செய்யப்படும் அனைத்து விவரங்களும், இந்த சுகாதார அட்டையில் பதிவேற்றமாகிவிடும். நாட்டின் எந்த மருத்துவமனை அல்லது மெடிக்கலை நீங்கள் அணுகினாலும், அனைத்து விவரமும் இதில் பதிவாகும். டாக்டர் அப்பாயின்மென்ட், மருந்து குறிப்பு உள்ளிட்ட எல்லா விவரமும் இதில் இருக்கும். அவசர காலத்தில் எளிதாக அனைத்து மருத்துவ விவரங்களையும், மருத்துவர்கள் அறிந்து கொள்ள இந்த அட்டை உதவும்.
தாரக மந்திரம்
சுயசார்பு இந்தியா என்பது தான் இனிமேல் நமது தாரக மந்திரம். இந்தியா எப்போதுமே சாதனைகளின் நாடு என்பதை உலகம் பார்த்து வருகிறது. நமது நாடு மற்றும் நமது மக்கள் நமது நம்பிக்கை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்பதுதான் நமது கொள்கை.
சாதனை
நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். சில மாதங்களுக்கு முன்பாக வென்டிலேட்டர், முகக் கவசம், தனி நபர் பாதுகாப்பு கவசத்திற்கு பற்றாக்குறை இருந்தது. ஆனால் நாம் இப்போது அனைத்தையும் உற்பத்தி செய்கிறோம். நாம் 75வது சுதந்திர தின விழாவை நோக்கி செல்ல உள்ள இந்த காலகட்டத்தில், இந்திய பொருட்கள், இந்தியர்களுக்கே என்ற கோஷம் நாடு முழுக்க ஒலிக்கவேண்டும்.
உலகத்திற்காக உற்பத்தி
அந்நிய நேரடி முதலீடுகள் புதிய சாதனையை படைத்துள்ளன. விண்வெளித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றில் தனியாரின் பங்களிப்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேக் இன் இந்தியா என்ற கொள்கை இனிமேல் மேக் ஃபார் இந்தியா என்று மாறும். இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.