காங். அலுவலகம், சோனியா வீடு முன்பு திடீர் என போலீஸ் குவிப்பு- நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பி.க்கள்
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், சோனியா காந்தியின் வீடு உள்ளிட்டவைகள் முன்பாக நேற்று திடீரென பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. டெல்லி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை காங்கிரஸ் எம்.பிக்கள் எழுப்ப உள்ளனர்.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை யங்க் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது அமலாக்கத்துறை வழக்கு. இதனையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டாகப் போராட்டம் நடத்தினர். மேலும் நாட்டின் பல மாநிலங்களில், சோனியா-ராகுலிடம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டமும் நடத்தினர்.
இதன்பின்னர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று திடீரென நேஷனல் ஹெரால்டு அலுவலகம், யங் இந்தியா அலுவலகம் ஆகியவற்றை போலீசார் சீல் வைத்தனர். அத்துடன் காங்கிரஸ் கட்சி தலைமை அலுலகம், சோனியா காந்தி வீடு ஆகியவை முன்பாக பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாகத்தான் போலீசார் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சோனியா, ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்களோ? என்கிற கேள்வியும் எழுந்தது. இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள் உடனடியாக ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். மேலும் கர்நாடகா பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் ராகுல் காந்தி டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். அத்துடன் சோனியா காந்தி வீடு, கட்சி தலைமை அலுவலகம் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்ப காங்கிரஸ் எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications