நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு..ராகுல்காந்தியை 3 நாட்களாக விடாது விரட்டும் அமலாக்கத்துறை
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று மூன்றாவது நாளாக ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகைகளின் பங்குகளை மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பியிடம் மீண்டும் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர்.
காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில் அவருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் வீட்டுக்குச் சென்றார். மாலை 4:30 மணியளவில் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
நேற்று விசாரணைக்கு ராகுல் ஆஜரானபோது மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரது சகோதரி பிரியங்காவும் வந்திருந்தார். விசாரணை முடிந்து நேற்றிரவு 11.30 மணியளவில் அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் இருந்து ராகுல் புறப்பட்டுச் சென்றார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. இது பழிவாங்கும் நடவடிக்கை என கூறி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்பர் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கூடினார்கள். அந்த பகுதியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் அங்கு, கட்சி அலுவலகத்துக்கு வர அனுமதி பெற்றவர்களை தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையும் மீறி சில எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையில் போலீசார் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,போலீசார் மல்லுக்கட்டி பிடிக்கிறார்கள். வயிற்றில் அடிப்பது, கையை வலி ஏற்படுத்தும் விதமாக அழுத்தி பிடிப்பது, வேகமாக தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். மிகவும் அநியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்றார். ஜோதிமணி கூறுகையில், "போலீசார் மிகவும் கொடூரமாக, மிருகத்தனமாக நடந்துகொண்டனர். இருந்தாலும் இந்த ஆட்சியை அகற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.
இந்நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேற்றே விசாரித்து முடிக்குமாறு ராகுல் கேட்டுக்கொண்டும், அவரை மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல்காந்தியை தொடர் விசாரணைக்கு அழைப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இன்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காலை முதலே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் அமர்ந்திருந்த தொண்டர்கள் பலரும் ராகுல்காந்தி ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டனர். பஜனை பாடல்களைப் போல பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சாலைகளில் குவிந்த ஜோதிமணி எம்பி உள்ளிட்டவர்களை காவல்துறையினா கைது செய்தனர்.
கொரோனா பரவலை அடுத்து சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜூன் 23ஆம் தேதியன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.