நீட் தேர்வு ஒத்திவைப்பு இல்லை - அறிவித்தபடி செப்.12-ல் நடைபெறும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!
டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவைத் தேர்வை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான (MBBS/BDS/BAMS/BSMS/BUMS/BHMS) தேசிய அளவிலஆன நுழைவு மற்றும் தகுதித் தேர்வு - (NEET - NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST NEET (UG) செப்டம்பா் மாதம் 12-ந் தேதி நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளிலும் நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத்தேர்வுக்காக ஜூலை 13-ந் தேதி முதல் ஆகஸ்ட் 14-ந் தேதி ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் செப்டம்பர் 12-ந் தேதியன்று மேலும் பல நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதனை சுட்டிக்காட்டி, நீட் தேர்வு நடைபெறும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஹிருஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.

உச்சநீதிமன்றம் கருத்து
இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஹிருஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் பிறப்பித்த உத்தரவு: நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இத்தகைய ஒரு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் சில மாணவர்கள்தான் கேட்கின்றனர். இவர்களுக்காக நாடு முழுவதும் தேர்வை ஒத்திவைக்க முடியாது.

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்
நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தே தீரும். இதில் எந்த வித மாற்றுக் கருத்துகளுக்கும் இடமே இல்லை. நீட் தேர்வை ஒத்திவைக்க கோருகிற அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

முடிவுக்கு வந்த குழப்பம்
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் நீட் நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்கிற குழப்பம் இருந்து வந்தது. இதனையடுத்து கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் திடீரென வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் மீண்டும் நீட் தேர்வுகள் நடைபெறுவதில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது உச்சநீதிமன்றமே திட்டவட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தெளிவுபடுத்தி உள்ளது. இது தொடர்பான மனுக்களையும் தள்ளுபடி செய்திருப்பது குழப்பங்களை தீர்த்து வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications