நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க லோக்சபாவில் கனிமொழி, ராஜ்யசபாவில் திருச்சி சிவா நோட்டீஸ்!
டெல்லி: நீட் தேர்வு மோசடிகள் தொடர்பாக லோக்சபா, ராஜ்யசபாவை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி, ராஜ்யசபாவில் திருச்சி சிவா ஆகியோர் நீட் தேர்வு மோசடிகள் குறித்து சபைகளை ஒத்திவைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு மோசடிகள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. நீட் தேர்வு மோசடிகள் குறித்து ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வட இந்திய மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்து வரும் கும்பலைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடியில் மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு எழுதுவதில் இருந்து மாணவர்கள் பலரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு போல நெட் உள்ளிட்ட தேசியத் தேர்வு முகமை நடத்துகிற தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
நீட் தேர்வு முறையையே ஒழிக்க வேண்டும் என தமிழ்நாட்டுடன் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில முதல்வர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக நாட்டின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தர வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் இன்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி லோக்சபாவில் இதற்கான நோட்டீஸ் கொடுத்துள்ளார். ராஜ்யசபாவில் ராஜ்யசபா குழுத் தலைவர் திருச்சி சிவா, நீட் மோசடிகள் குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளார். லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், கேசி வேணுகோபால் ஆகியோரும் நீட், நெட் தேர்வு முறைகேடுகள் குறித்து லோக்சபாவில் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications