முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் பிஜி தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.. ஏன்?
டெல்லி: ஜூன் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் தொடர்ச்சியாக தேசிய தேர்வு முகமை தேர்வை ஒத்திவைத்துள்ளது.
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 15 ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் பிஜி தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்ததால், அதனை செயல்படுத்த கால அவகாசம் தேவை என்பதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வு வரும் 15 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தேர்வுகள் இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் எனக் கூறியயிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், NEET-PG தேர்வை இரண்டு ஷிப்டுகளுக்குப் பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த உத்தரவிட்டது.
நீட்-பிஜி தேர்வுகளை இரண்டு ஷிப்டுகளில் நடத்தும் தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை "எதேச்சதிகாரமான தன்மையை உருவாக்குகிறது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீட் பிஜி தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், இது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த கால அவகாசம் தேவை என்பதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications