நீட் வினாத்தாள் விற்பனை விவகாரம்.. குஜராத், பீகாருக்கு செல்லும் சிபிஐ டீம்..சிக்குமா 'பெருந்தலைகள்'?
டெல்லி: நீட் வினாத்தாள் விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரணையை ஏற்றுக் கொண்டது சிபிஐ. இதனையடுத்து நீட் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் குழு செல்ல இருக்கிறது. சிபிஐ விசாரணையில் நீட் முறைகேடுகளில் தொடர்புடைய பீகார் அமைச்சர் உள்ளிட்ட 'பெருந்தலைகள்' சிக்குமா? என்பது எதிர்பார்ப்பு.
நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ வசம் மத்திய அரசு ஒப்படைத்தது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிக்கையில், தேசிய தேர்வு முகமை, நீட் ( யுஜி) தேர்வை கடந்த மாதம் 5ந்தேதி ஓஎம்ஆர் (பேனா மற்றும் காகிதம்) முறையில் நடத்தியது.

இதில் முறைகேடுகள் / மோசடி / ஆள்மாறாட்டம் போன்றவை தொடர்பான சில வழக்குகள் பதிவாகியுள்ளன. தேர்வு நடத்துவதில் வெளிப்படைத்தன்மை உள்ளதால், இந்திய அரசின் கல்வி அமைச்சகம், மறு ஆய்வுக்குப் பிறகு, விரிவான விசாரணைக்காக மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இந்த விஷயத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகள், அதனுடன் தொடர்புடைய அல்லது இடைநிகழ்வான விஷயங்களைத் தடுப்பதற்கும் பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. தேர்வுகளின் புனிதத்தை உறுதி செய்யவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. சம்பந்தப்பட்ட எந்தவொரு தனிநபரும் / நிறுவனமும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சிபிஐ இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்துள்ளது. இதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் குழு குஜராத் மற்றும் பீகாருக்கு செல்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நீட் முறைகேடுகளில் ஈடுபட்ட கல்வி நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதேபோல பீகாரில் நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக செயல்பட்ட பீகார் அமைச்சர் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என்பதும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications