18 மாநிலங்களில் "கவலை தரும்" உருமாறிய கொரோனா.. இரட்டை மாறுபாடு.. மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு
டெல்லி: கொரோனா வைரஸின் புதிய "இரட்டை உருமாறிய மாறுபாடு" நாட்டின் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பல வகை உருமாறிய கொரோனா பரவியுள்ள நிலையில், இது அரசுக்கு கவலையை அதிகரித்துள்ளது.
"VOC" அதாவது, கவலை தரும் உருமாறிய கொரோனா பட்டியலில் இந்த வகை கொரோனா வைரசை சேர்த்துள்ளது, மத்திய அரசு.
Recommended Video
இந்த வகை வைரஸ் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், சில மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் விரைவாக அதிகரிப்பதற்கும், இதற்குமான தொடர்பை உறுதி செய்ய முடியவில்லை" என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல வகை கொரோனாக்கள்
இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 10,787. இதில் பிரிட்டிஷ் உருமாறிய கொரோனா கேஸ்கள் இந்தியாவில் 736 ஆகும். நாட்டில் 34 பேருக்கு தென்னாப்பிரிக்க உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரேசில் உருமாறிய கொரோனா ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இரட்டை உருமாற்றம்
வைரசின் முழுமையான மரபியலைப் புரிந்து கொள்வதற்காக 10 தேசிய ஆய்வகங்களின் அரசாங்க கூட்டமைப்பால்
மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், இரட்டை உருமாறிய கொரோனா பரவல் இந்தியாவில் 18 மாநிலங்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா கேஸ்கள்
இந்தியா இன்று 47,262 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து பார்த்தால் இதுதான் மிக உயர்ந்த ஒற்றை நாள் அதிகரிப்பு ஆகும். இதன் மூலம், இந்தியாவில் இதுவரை, 1.17 கோடிக்கு மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு
கொரோனா கேஸ் கவலைக்குரியதாக அதிகரித்துள்ள நிலையில், ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட அனைத்து மத வழிபாடுகளிலும், கோவிட் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு இன்று மாநிலங்களை வலியுறுத்தியுள்ளது.