வாக்குப்பதிவு எந்திரத்தில் நம்பிக்கையின்மை இருக்கு.. தேர்தல் முடிவினை அறிவிக்க காங்கிரஸ் புது ஐடியா!
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தமட்டில் பெரிய அளவில் நம்பிக்கையின்மை உள்ளது எனவே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ளார்.

ஒப்புகை சீட்டுக்களின் அடிப்படையில்
பாரத் ஜோடா யாத்திரைக்கு இடையே பஞ்சாப்பில் வைத்து திக் விஜய் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''தேர்தலில் வாக்காளர்கள் வாக்கு அளித்த பிறகு யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து காட்டும் விவி பாட் ஒப்புகை சீட்டுக்களை மைக்ரோ சிப் இல்லாத பெட்டியில் சேகரிக்க வேண்டும். இந்த ஒப்புகை சீட்டுக்களின் அடிப்படையில் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது" என்றார்.

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்
மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாகவும் தனது ட்விட்டரில் திக் விஜய்சிங் பதிவிட்டு இருந்தார். திக் விஜய் சிங் கூறுகையில், "ரிமோட் வாக்குப்பதிவு இயந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம், சீஷரின் மனைவி போல சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

பெரிய அளவில் நம்பிக்கையின்மை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தமட்டில் பெரிய அளவில் நம்பிக்கையின்மை உள்ளது. இது உலகளாவிய உண்மை. மக்கள் நல ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் எழுப்பியுள்ள கேள்விகளில், அவர்களை தேர்தல் ஆணையம் திருப்திப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.

யாருக்கு வாக்களித்தார்
நான் சொல்வது மிகவும் எளிமையான, அர்த்தமுள்ள கோரிக்கை தான். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு அளிப்பதில் சிறிய மாற்றம் வேண்டும். ஒருவர் வாக்களித்த பிறகு யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு தோன்றுகிறது. அதை பார்ப்பதற்கு பதிலாக ஒப்புகை சீட்டு கைகளில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். வாக்காளர்கள் அதை மைக்ரோ சிப் இல்லாத பெட்டியில் போட வேண்டும். பின்னர் இதன் அடிப்படையில் வாக்குப்பதிவு முடிவுகளை அறிவிக்க வேண்டும்" என்றார்.

இதன் அடிப்படையில் முடிவை..
தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை 'மைக்ரோசிப்' பொருத்தாத பெட்டியில் வைத்து பின்னர் அதன் அடிப்படையில் முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்துள்ளது. பல்வெறு அரசியல் கட்சிகளும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பும் நிலையில் காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications