ஜெய் பாலஸ்தீனம் டூ ஜெய் இந்து ராஷ்டிரா.. இனி எம்பிக்கள் பதவியேற்கும்போது கோஷம் எழுப்ப தடை!
டெல்லி: சமீபத்தில் மக்களவையில் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் பதவியேற்கும்போது முழக்கங்களை எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இவ்வாறு முழக்கம் எழுப்புவதை தடுக்கும் வகையில் மக்களவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
18வது லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் பதவியேற்கும்போது தங்களுடைய கொள்கைகளை பிரதிபலிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பியிருந்தனர். இது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது.

எம்பிக்கள் "மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட xxx எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன்" என்று சொல்லி உறுதி ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டின் எம்பிக்கள் தங்கள் சொந்த மொழியில் மேற்குறிப்பிட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டு பதவியேற்றனர். உறுதிமொழி எடுத்த பின்னர் முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர்.
அதாவது, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், "சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் மீதான வெட்ககரமான தாக்குதலை நிறுத்துங்கள். ஜெய் பீம்! ஜெய் சம்விதான் (அரசியலமைப்பு)" என்று உறுதிமொழி ஏற்ற பின்னர் முழக்கமிட்டிருந்தார். மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவி ஏற்றபின் பின் "நீட் வேண்டாம், Ban நீட்" என முழக்கமிட்டார். திருமாவளவன் பதவியேற்ற பின் 'ஜனநாயகம் வாழ்க. அரசியலமைப்பு வாழ்க' என்று கோஷமிட்டிருந்தார்.
தமிழ்நாட்டின் எம்பிக்கள் தவிர, ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஓவைசி பதவியேற்கும்போது எழுப்பியிருந்த முழக்கமும் பெரும் பஞ்சாயத்தை கிளப்பியிருந்தது. ஒவைசி பதவியேற்ற பின்னர் "ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்" என்று முழங்கியிருந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
'ஜெய் பாலஸ்தீனம்' என்று முழங்கியதற்காக அசாதுதீன் ஓவைசியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான அமித் மாளவியா, "தற்போதுள்ள விதிகளின்படி, பாலஸ்தீனம் குறித்து முழங்கியதற்காக அசாதுதீன் ஒவைசி தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்" என்று x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மறுபுறம் உத்தரப் பிரதேச பாஜக எம்.பி. சத்ரபால் சிங் 'ஜெய் ஹிந்து ராஷ்டிரா' என கோஷமிட்டதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்கும்போது முழக்கங்களை எழுப்புவதை தடுக்கும் நோக்கில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மக்களவை உறுப்பினர், இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது அட்டவணையில் கூறியுள்ளதுபடி, உறுதிமொழி ஏற்கும்போது அதற்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த கருத்தையும் கூறக்கூடாது என்கிற புதிய விதி அமல்படுத்தப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இதன் மூலம் எம்பிக்கள் பதவியேற்கும் போது முழுக்கங்கள் எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications