'C.1.2' புதிய உருமாறிய கொரோனா.. மின்னல் வேகத்தில் பரவுகிறது, வேக்சினும் வேலை செய்வதில்லை..ஷாக் தகவல்
டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய C.1.2 கொரோனா தொற்று, மிக வேகமாகப் பரவலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக அவை தடுப்பூசிக்கும் கட்டுப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஓர் ஆண்டாகவே உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது கொரோனா பாதிப்பு தான். உலகில் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை கொரோனா பாதிப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
தீவிரமான கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் சில நாடுகள் மட்டுமே இதைக் கட்டுக்குள் வைத்துள்ளது. குறிப்பாக இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டிருப்பது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உருமாறிய கொரோனா
இந்நிலையில், கடந்த மே மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய C.1.2 கொரோனா வகை அதிவேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவனம் (NICD) மற்றும் KwaZulu-Natal ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சீனா, காங்கோ, மொரிஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது.

C.1.2 கொரோனா
முதல் அலை சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய C.1 என்ற உருமாறிய கொரோனாவில் இருந்து மேலும் உருமாற்றம் அடைந்து இந்த புதிய C.1.2 உருமாறிய கொரோனா தோன்றியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இந்த C.1.2 கொரோனா தொற்று கண்டறியப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் genomes sequence செய்யப்பட்ட மாதிரிகளில் 0.2% பேருக்கு மட்டும் இந்த C.1.2 கொரோனா பாதிப்பு இருந்தது. இது கடந்த மே மாதம் 1.6%ஆகவும் அதைத்தொடர்ந்து ஜூலை மாதம் 2% ஆகவும் அதிகரித்துள்ளது.

அதிகளவில் உருமாற்றம்
முதலில் பீட்டா மற்றும் டெல்டா கொரோனா வகைகள் கண்டறியப்பட்ட போது, அவை எப்படிப் பரவியதோ அதுபோலவே இப்போது இந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவின் புரத ஸ்பைக் பெரியளவில் உருமாற்றம் அடைந்துள்ளதாகவும் இது சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட வைரசை விடப் பெரியளவில் மாறியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசிக்குப் பலன் தராது
இது குறித்து கொல்கத்தாவின் சிஎஸ்ஐஆர் -இந்திய ரசாயன உயிரியல் நிறுவனத்தின் ஆய்வாளர் ரே கூறுகையில், "இந்த உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளது. புரத ஸ்பைக் பெரியளவில் மாற்றமடைந்துள்ளதால் தடுப்பூசி அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து இது தப்பவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த கொரோனா உலகெங்கும் பரவினால் இது பெரிய தலைவலியை ஏற்படுத்தும். எனவே, இந்த வைரஸ் பரவுவதை நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்." என்றார்.

ஏன் தடுப்பூசிக்குப் பலன் தராமல் போகலாம்
ஒரு வைரசைச் சுற்றிலும் பொதுவாகவே புரத ஸ்பைக் இருக்கும். நமது மனித உடலில் இருக்கும் செல்களில் அது இந்த புரத ஸ்பைக்கைக் கொண்டே ஊடுவுரும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள பெரும்பாலான கொரோனா வேக்சின்கள் இந்த புரத ஸ்பைக்கை அழிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புரத ஸ்பைக் முற்றிலுமாக மாறினால், தடுப்பூசி இதற்குப் பலன் தராமல் போக வாய்ப்புள்ளது. இருப்பினும், இது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications