இன்னும் ஒரு வாரம் தான்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்புக்கு நிர்பயா தாயார் வரவேற்பு
டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஒரு வாரத்தில் சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும் என ஹைகோர்ட் கெடு விதித்துள்ளதற்கு நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆஷா தேவி என்பவரின் மகள் நிர்பயா. இவர் டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த நிர்பயா சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு ஹைகோர்ட் அதிரடி செக்.. ஒன்றாகவே தூக்கு என்றும் பரபரப்பு தீர்ப்பு
ஒருவர் தற்கொலை
இதில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராமன் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தண்டனையை தடுக்க
இந்நிலையில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேரும் மாறி மாறி கருணை மனுக்களை தாக்கல் செய்தும், உச்ச நீதிமன்றத்தில் புதிய முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தும் தண்டனையை தாமதம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக நிர்பயா குற்றவாளிகளுக்கு இரண்டு முறை டத் வாரண்ட் விதிக்கப்பட்டும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
நீதிமன்றம் தடை
இதனிடையே டெல்லி நீதிமன்றம் கடந்த ஜனவரி 31ம் தேதி அளித்த உத்தரவில், பிப்ரவரி 1ம் தேதி 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடக்கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை தூக்கிலிடக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் டெல்லி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
டெல்லி ஹைகோர்ட்
இதை இன்று விசாரித்த டெல்லி ஹைகோர்ட், நிர்பயா கொலை குற்றவாளிகள் ஒரே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்பதால் ஒன்றாகவே அவர்களை தூக்கிலிட வேண்டும். அவர்களை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது. நிர்பயா குற்றவாளிகள் 1 வாரத்துக்குள் சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை காரணம் காட்டி குற்றவாளிகள் காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
நிர்பயா தாயார்
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்றுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இதன்படி 4 குற்றவாளிகளுக்கு 1 வாரம் சட்டநடைமுறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றார்.இதனிடையே கடந்த ஜனவரி 31ம் தேதி தடை விதிக்கப்பட்ட போது கதறி அழுத ஆஷா தேவி, குற்றவாளிகளின் வக்கீல் தண்டனை நிறைவேற வாய்ப்பில்லை என்று தற்பெருமை பேசுகிறார் என கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.