2019-2020-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: நாடாளுமன்றத்தில் 2ஆவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டாகும்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 2019-2020-ஆம் ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார்.
இதில் மக்களை கவரும் நல்ல பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. அப்போது நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஒரு மாதமாக முழு பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் பட்ஜெட்டுக்கு முன்பே தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நேற்றைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
சூட்கேஸுக்கு பதிலாக சிவப்பு நிற பையில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கி வைத்த நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் கூறுகையில் நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம்.
"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்" என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.