தமிழை காட்டுமிராண்டி மொழினு சொன்னாரே.. அவர் போட்டோவுக்கு மாலை போடுறீங்க! சீறிய நிர்மலா சீதாராமன்
டெல்லி: திமுக எம்பிக்கள் நாகரீகமற்ற முறையில் பேசியதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த நிலையில் தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்ப பெறக் சொல்லும் நீங்கள், தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள் என நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2025 - 2026 பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், திமுக எம்பிக்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசினர். குறிப்பாக கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்காது என பேசினர்.

தொடர்ந்து அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,"தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார்.
இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அம்மாநில அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். அம்மாநில மக்களுக்கும் அவர்கள் நியாயமானவர்களாக இல்லை" என்றார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து தனது கருத்தை திரும்பப்பெற்ற தர்மேந்திர பிரதான்," என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதனை தான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என பேசி இருந்தார்.
இந்நிலையில், இன்று மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,"தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனாவிற்கு பிறகு பின் தங்கியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள். ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள்" என்றார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக பேசிய திமுக எம்பி கனிமொழி, பாஜக அரசு தினமும் தமிழ்நாட்டையும் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications