கோரிக்கையை ஏற்காத அமித் ஷா.. மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை இல்லை.. விவசாயிகள் அதிரடி முடிவு
டெல்லி: மத்திய அரசுடன் 6வது கட்ட பேச்சுவார்த்தையை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய மோடி அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அரசு 5 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகளுடன் அரசின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின், 13 தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிசான் சபாவின் பொதுச்செயலாளர், ஹன்னன் மொல்லா, விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படாது என உள்துறை அமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.
சட்டங்களில் திருத்தங்கள் செய்ய அரசு தயாராக இருக்கிறது என்பதை எழுத்து வடிவில் மத்திய அரசு தர இருப்பதாக அவர் கூறியதாகவும், ஹன்னன் மொல்லா தெரிவித்தார்.
அரசு எழுத்து வடிவில் அளிக்கும் திருத்தங்கள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரசுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஹன்னன் மொல்லா கூறினார்.
எனவே சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை என்பதால் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் அமித் ஷாவுடனான கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் மத்தியில் இன்றைய பேச்சுவார்த்தை குறித்து இருவேறு கருத்துகள் காணப்பட்டது. ஒருசில தலைவர்கள் பேச்சுவார்த்தையை புறக்கணிக்கப் போவதாக கூறிய நிலையில் வேறு சில தலைவர்கள், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டனர்.












Click it and Unblock the Notifications