பரபரப்பு தீர்ப்பு.. தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
தடுப்பூசி கட்டாயமாக்கப்பட கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது
டெல்லி: கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் தொற்று பாதிப்பு ஓரளவு குறைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் அதிகமாகிவிட்டது.. எனவே, தடுப்பூசி விஷயத்தில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தின.
6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி
குறிப்பாக, கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது... இதுவரை 189 கோடியே 23 லட்சத்திற்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
தடுப்பூசி
இதனிடையே, கொரோனா தடுப்பூசி கட்டாயம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதித்த பல்வேறு மாநில அரசின் அரசாணைகள் வெளியிட்டன... அதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று கூறி, பல்வேறு மாநில அரசுகள் அந்த அரசாணைகளை வெளியிட்டு இருந்தன. இப்படி மாநில அரசுகளின் உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
சுப்ரீம்கோர்ட்
இந்த உத்தரவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த மனுக்கள் மீதான விசாரணையும்சுப்ரீம் கோர்ட்டில் இத்தனை நாட்களும் நடந்து வந்த நிலையில், இன்று விசாரணைக்கு மீண்டும் வந்தது... வழக்கை விசாரித்த நீதிபதிகள் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளனர்.
கட்டாயப்படுத்த முடியாது
அவர்கள் கூறியிருப்பதாவது: "எந்தவொரு தனி நபரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது... சில நிபந்தனைகளை உருவாக்கி, அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது.. ஆனால் அதேசமயம், அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ், தடுப்பூசியை செலுத்தி கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
அறிவுறுத்தல்
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அறிவுக்கு ஒவ்வாதது என்று கூறிவிடவும் முடியாது.. எனவே, கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்க வேண்டும்... அத்துடன், கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, இந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.