கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் அபராதம்? “நாங்க சொல்லவே இல்லை”- மறுப்பு தெரிவித்த ரயில்வே அமைச்சகம்
டெல்லி : ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. சமூக ஊடகங்களிலும் இந்தத் தகவல் அதிகமாக பரவியது.
இந்தத் தகவல் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரயில்களில் லக்கேஜ் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவுவதைப் போன்று புதிய உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்கப்படவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக லக்கேஜுக்கு அதிக கட்டணம்
கடந்த சில நாட்களாக சில செய்தி தளங்களில், கேரி-ஆன் பேக்கேஜ் கொள்கையை இந்திய ரயில்வே மாற்றியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் யாரேனும் அதிக உடைமைகளுடன் பயணிப்பதை கண்டறிந்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ரயில்வே அமைச்சக ட்வீட்
கடந்த மே 29-ஆம் தேதி ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "ரயில்களில் பயணிகள் அதிகப்படியான லக்கேஜை கொண்டு பயணிக்க வேண்டாம். கூடுதலாக லக்கேஜ் இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று லக்கேஜை முன்பதிவு செய்யுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கூடுதல் லக்கேஜ் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ரயில்வே மறுப்பு
இந்நிலையில், இந்தத் தகவலை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உடமைகளைக் கொண்டு சென்றால் அபராதம் விதிப்பது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுதான் தற்போதும் நடைமுறையில் உள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவுவதைப் போன்று புதிய உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விதிமுறைகள்
ரயில்களில் தற்போதைய விதிமுறைகளின்படி, பயணிகள் அவரவர் வகுப்புக்கு ஏற்ப 40 கிலோ முதல் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்ல முடியும். ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம். ஏசி வகுப்பில் 50 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம். முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு
எனினும், இந்திய ரயில்வே சமீபத்தில் டிக்கெட் முன்பதிவு வரம்பை மாற்றியுள்ளது. ரயில்வே பயணிகள், இனி, ஒரு மாதத்தில் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ரயில் பயணிகளுக்கு வசதியாக, தேசிய போக்குவரத்துக் கழகம் டிக்கெட் முன்பதிவு வரம்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இப்போது, ஒரு ரயில்வே பயணி ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்டுகளுக்குப் பதிலாக ஆதார் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம் அதிகபட்சம் 12 டிக்கெட்டுகளையும், ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் அதிகபட்சமாக 24 டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்.












Click it and Unblock the Notifications