வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்... தடுப்பூசி எதுவும் இல்லை என பீதியை கிளப்பும் மத்திய அமைச்சர்
டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவி வரும் சூழலில் பறவைக் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பால்யன் கூறியுள்ளார்.
Recommended Video

கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் காகங்கள் திடீரென கொத்து, கொத்தாக உயிரிழந்தன. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அவை பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக காகங்கள் மட்டுமின்றி கிங்பிஷர்கள், மாக்பீஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளும் உயிரிழந்து வருகின்றன. இதன் காரணமாக இதுவரை நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனிதர்களுக்குப் பரவும்
இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் என்றாலும்கூட இதுவரை நாட்டில் யாருக்கும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்று கால்நடை வளர்ப்பு, பால் வளர்ப்பு மற்றும் மீன் துறைகளுக்கான இணை அமைச்சர் சஞ்சீவ் பால்யன் கூறியுள்ளார். ஏற்கனவே, கொரோனா பரவல் காரணமாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பறவை காய்ச்சல் தொடர்பான செய்தி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல்முறை இல்லை
இந்தியாவில் பறவை காய்ச்சல் ஏற்படுவது இது முதல் முறை இல்லை என்று குறிப்பிட்ட சஞ்சீவ் பால்யன், ஏற்கனவே 2006ஆம் ஆண்டிலும் அதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டிலும் நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், இது குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுகளுக்குப் பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார்.

தடுப்பூசி இல்லை
பறவை காய்ச்சல் சிகிச்சை தொடர்பாக அவர் பேசுகையில்,"இதுவரை பறவை காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்க எந்த தடுப்பு மருந்தும் இல்லை. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே செய்ய முடியும். இறந்த பறவைகளைக் கவனமாக அப்புறப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம். கேரளாவில் வாத்து பண்ணைகளிலும் மற்றும் ஹரியானாவில் கோழிப்பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

மத்திய அரசு அறிவுறுத்தல்
முன்னதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பறவை காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. மேலும், பறவைக் காய்ச்சல் இறப்புக்கள் பதிவாகும் பகுதிகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஐந்து மாநிலங்களில் பாதிப்பு
இதுவரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் என்றாலும்கூட, கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவில் முதலில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதுமுதல் இதுவரை மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல் இருப்பது இந்தியாவில் உறுதி செய்யப்படவில்லை.

மனிதர்களைப் பாதிக்கலாம்
இது குறித்து மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பறவை காய்ச்சலால் பாதிக்கப்படும் கோழிகளை உண்பதால் இவை மனிதர்களுக்குப் பரவுகின்றன என்பதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், பறவைக் காய்ச்சலால் பாதிக்கும் பறவைகளை மனிதர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. குளிர்கால மாதங்களில் அதாவது செப்டம்பர் - அக்டோபர் முதல் பிப்ரவரி - மார்ச் வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பறவைகளால் இந்த நோய் பரவுகிறது" என்று அதில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications