'கொரோனாவை பரப்புபவர்கள் இல்லை.. நோயெதிர்ப்பு சக்தியை தரும் உணவை விளைவிப்பவர்கள்..' விவசாயிகள் வேதனை
டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ஆறு மாதங்களை நிறைவடைந்துள்ள நிலையில், விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் விவசாயிகள் கொரோனாவை பரப்புபவர்கள் இல்லை, நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவை விளைவிப்பவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாமல், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்- ராம்தேவ் மீது தேசதுரோக வழக்கு கோரும் இந்திய மருத்துவ சங்கம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியிலுள்ள காசிப்பூர், சிங்கு எல்லைகளில் இந்தப் போராட்டங்கள் தொடங்கியது. ஆறு மாதங்களைக் கடந்த பிறகும் இந்த போராட்டம் முடியவில்லை.
விவசாயிகள் போராட்டம்
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என்பதில் விவசாயிகள் மிக உறுதியாக உள்ளனர். இந்நிலையில், போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு விவாசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. மேலும், டெல்லி எல்லைகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதில் கருப்பு தலைப்பாகை அணிந்து கலந்துகொண்ட விவசாயிகள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
பாஜக வீழ்த்தப்பட வேண்டும்
இது குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர் கூறுகையில், போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் ஆகிவிட்டன. பஞ்சாப், ஹரியான, டெல்லி, உபி எனப் பல மாநிலங்களிலும் போராட்டம் வலுவடைந்துள்ளது. மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்றார். விவாசியகளின் போராட்டத்திற்குக் காங்கிரஸ், சிவசேனா, திமுக, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்துள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
டெல்லியில் கடந்த 6 மாதங்களாகப் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள். நவம்பர் மாதம் ஏற்பட்ட கடும் குளிரின்போதும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலிருந்த வெயிலின் போதும் போராட்டத்தைக் கைவிடவில்லை. விவசாயிகள் டெல்லி சாலைகளிலேயே குடியிருப்புகளை அமைத்துத் தங்கி வருகின்றனர். மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய புதிய விதிகளை ஏற்படுத்த வேண்டும் ஆகியவை விவசாயிகளின் கோரிக்கையாகும்.
போராட்ட களத்தில் கொரோனா
அதேநேரம் ஒரே இடத்தில் அதிகளவிலான விவசாயிகள் உள்ளதால் இது கொரோனா பரவும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள பல விவசாயிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. போராட்ட களத்தில் கொரோனா அச்சுறுதல் இருப்பது தெரிந்தாலும், எதிர்காலத்தைக் காக்கப் போராட்டம் மட்டுமே மட்டுமே ஒரே வழி என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ராகேஷ் டிக்கைட்
இது குறித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "விவசாய சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை வாபஸ் வாங்கும் எண்ணமில்லை. மத்திய அரசுக்கு கொரோனா பரவல் குறித்த உண்மையாகவே கவலை இருந்தால், விவசாய சட்டங்களை வாபஸ் பெறப்படும். நாங்கள் உடனடியாக போராட்டத்தை ரத்து செய்வோம். இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தாயாராகவே உள்ளோம்.
கொரோனாவை பரப்புபவர்களா?
நாங்கள் கொரோனா வைரசைப் பரப்புபவர்கள் இல்லை. நாங்கள் உணவளிக்கும் விவசாயிகள். நாங்கள் அளிக்கும் உணவு தான் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். ஆனால், அரசு எங்களுக்கு சானிடைசர், மாஸ், மருந்துகள் என எதையும் வழங்குவதில்லை. மத்திய அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்விடைந்துவிட்டது" என்றார்.
உச்ச நீதிமன்றம்
விவசாய சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை தற்போது உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இது தொடர்பாக முடிவெடுக்க வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது. இருப்பினும், சில விவசாயிகள் இந்த குழுவின் சார்பின்மை குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.