அமைதி ஒப்பந்தத்தை கைவிட்ட நாகாலாந்து தீவிரவாதிகள்.. டெல்லிக்கு பறக்கும் முதல்வர்- மீண்டும் யுத்தம்?
டெல்லி: 1997-ம் ஆண்டு மத்திய அரசுடன் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (NSCN) தலைவர் ஐசக் முய்வா அறிவித்திருப்பது வடகிழக்கு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து நாகாலாந்து முதல்வர் தலைமையிலான அம்மாநில அமைச்சர்கள் குழு நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனைகள் நடத்த உள்ளது.
நாடு விடுதலை அடைந்த போது நாகாலாந்து இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கவில்லை. பின்னாளில் ராணுவ பலத்தால் இந்தியாவின் ஒரு பகுதியாக நாகாலாந்து இணைக்கப்பட்டது. நாகாலாந்து தனிநாடாக இருந்த போது அந்நாட்டின் ராணுவமாக இருந்த அமைப்புதான் நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில். இதில் பல்வேறு பிரிவுகள் உருவாகி இருக்கின்றன.

அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைக்கப்பட்ட நாகா பழங்குடி மக்களின் பகுதிகளை நாகாலாந்துடன் ஒருங்கிணைத்து அகன்ற நாகாலாந்து- நாகாலிம் என்ற தனி நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. 50 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போராட்டத்தை 1997-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு. அப்போது நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் தலைவர்கள் டெல்லிக்கு வந்து கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தை ஒரு சில குழுக்கள் ஏற்கவும் இல்லை.
1997-ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான போதும் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே இருந்தன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மத்திய அரசின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர்தான் ஆர்.என்.ரவி (தற்போதைய தமிழ்நாடு ஆளுநர்). இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது நாகாலாந்து மாநிலத்துக்கு தனி கொடி மற்றும் தனி அரசியல் சாசனம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பிரதான அம்சமாக இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு பிரதிநிதியாக இருந்த ஆர்.என்.ரவி நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் உருவாக்கிய ஒப்பந்தங்களும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. பின்னர் நாகாலாந்து மாநில ஆளுநராகவும் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். ஆனால் பாஜகவின் கூட்டணியில் இருந்த நாகாலாந்து கட்சிகளே ஆர்.என்.ரவிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார். அப்போது நாகாலாந்து மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
இந்த நிலையில் திடீரென 1997-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் அறிவித்துள்ளது. அத்துடன் இந்திய ராணுவத்துக்கு எதிராக போர் தொடரும் என்றும் அந்த இயக்கம் அறிவித்திருப்பது வடகிழக்கு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பின்னணியில் நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையிலான குழு நாளை டெல்லி வருகை தர உள்ளது. நாகாலாந்தில் ஏற்பட்டிருக்கும் பதற்ற சூழ்நிலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை இந்த குழு சந்திக்க உள்ளது. நாகாலாந்து ஆளுநராக தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பதவி வகித்து வருகிறார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறை நீடித்து வரும் நிலையில் நாகாலாந்தும் பதற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications