நபிகள் நாயகம் சர்ச்சை- நுபுர் சர்மாவை ஆக.10 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: நபிகள் நாயகம் சர்ச்சை விவகாரத்தில் பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10-ந் தேதி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பாக பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியிருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நுபுர் சர்மாவின் கருத்துக்காக அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தின. ஆனாலும் மத்திய அரசு இது தொடர்பாக இடைவிடாமல் விளக்கம் தந்து கொண்டிருந்தது.

இதன்பின்னர் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேநேரத்தில் அவரை கைது செய்ய கோரி நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இது தொடர்பாக பல மாநிலங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யபட்டன. நுபுர் சர்மாவின் கருத்துகளை ஆதரித்த ஒருவர் ராஜஸ்தான் பகிரங்கமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நுபுர் சர்மாவை மிக கடுமையாக விமர்சித்தது. நாட்டு மக்களிடம் பகிரங்கமாக, டிவியில் தோன்றி நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என விளாசினர் நீதிபதிகள். தம் மீதான இந்த விமர்சனங்களை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும்; தம் மீதான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நுபுர் சர்மா முறையிட்டார்.
நுபுர் சர்மாவின் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 10-ந் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை இவ்வழக்கில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது; மேலும் நுபுர் சர்மா மீது வழக்குகளை பதிவு செய்த மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications