ஜனவரி 3ம் தேதி முதல்.. 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. பிரதமர் மோடி அறிவிப்பு
ஓமிக்ரான் வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மோடி கூறியுள்ளார். மக்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் வைரஸ் பரவலை எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பதாகவும் அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 18 லட்சம் கொரோனா படுக்கைகளை தயார் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 415 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து 115 பேர் குணமடைந்துள்ளனதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரானை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டள்ளது.
ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறி தனது பேச்சை தொடங்கிய மோடி. உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. நாம் அனைவரும் 2022ஆம் ஆண்டுக்காக தயாராகி கொண்டு இருக்கிறோம். தற்போது ஓமிக்ரான் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தியாவிலும் பலருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யபப்பட்டுள்ளது. ஒமிக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு சரியான முறையில் உள்ளது. இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயாராகி உள்ளன. இந்தியாவில் குழந்தைகளுக்கான 90,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 5 லட்சம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன.
முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவதை மறந்துவிடக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்தும் திட்டம் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மாநிலங்களிடம் கூடுதலான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறினார்.
ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். குறைந்த நேரத்தில் அதிகபட்ச தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தடுப்பூசி வெற்றிக்கு நாட்டின் அறிவியல் சமூகத்திற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். விரைவில், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து மற்றும் டிஎன்ஏ தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை மக்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய மோடி, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications