"நீதித்துறைக்கு யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம்!" மத்திய அரசை கடிந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்.. என்னாச்சு
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அபு சலேமின் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாட்டை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் அபு சலேம். குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஆயுதங்களைக் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
போர்ச்சுகல் நாட்டில் இருந்த அபு சலேம், நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னர் கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியா அழைத்துவரப்பட்டார். அதன் பின்னர் இந்தியாவில் நடந்த வழக்கில் அபு சலேம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

வழக்கு
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திய சமயத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அளிக்கப்பட மாட்டாது என்று இந்தியா சார்பில் போர்ச்சுகல் நாட்டிற்கு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், போர்ச்சுகல் அரசுக்கு இந்தியா அளித்த உறுதிமொழியைப் பின்பற்றவில்லை என்று கூறி அபு லசேம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அட்வைஸ் தேவையில்லை
இது மனு மீதான விசாரணையில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், "நீதித்துறைக்கு யாரும் அட்வைஸ் செய்ய வேண்டாம். நீங்கள் முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தில் நாங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று எங்களிடம் கூற வேண்டாம். இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். எந்த பிரச்சினையில் முடிவு எடுக்க வேண்டும் என்று உள்துறைச் செயலாளர் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. எங்களிடம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்க வேண்டும்.

சுயமாக முடிவு எடுப்போம்
உள்துறை அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரத்தில் உரிய நேரத்தில் முடிவெடுப்போம் என்று கூறியுள்ளனர். இது போன்ற வரிகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், அரசு எடுக்கும் எந்த முடிவுக்கிற்கும் கட்டுப்படாமல் சட்டத்தின்படி அனைத்து வழக்குகளையும் தீர்ப்பதில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது" " என்று கடுமையான கருத்துகளை முன் வைத்து இருந்தனர். மேலும், சிபிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மீது தனது அதிருப்தியையும் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருந்தது.

மத்திய அரசு
மத்திய அரசு தனது போர்ச்சுகல் அரசுக்குக் கொடுத்த உத்தரவாதத்தைப் பின்பற்றவில்லை என்று கூறி அபு சலேம் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அபு சலேமின் வழக்கில் முடிவு எடுக்க இது சரியான நேரம் அல்ல என்றும் இதில் உச்ச நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா உச்ச நீதிமன்றத்தில், அபு சலேமுக்கு வழங்கப்படும் எந்த தண்டனையும் 25 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் என்று அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி போர்ச்சுகல் அரசுக்கு அளித்த உத்தரவாதத்திற்கு அரசாங்கம் கட்டுப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொடர் குண்டுவெடிப்பு
மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தின் படி வரும் நவ. 10, 2030 வரை அபு சலேமை இந்தியா சிறையில் அடைக்க முடியும். இருப்பினும், இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அனைத்து வழக்குகளிலும் சட்டப்படியே முடிவு எடுக்கப்படும் என்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த 1993இல் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் தான் அபு சலேம்.












Click it and Unblock the Notifications