தேசிய கடற்படை தினம்.. ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. போரின்போது கராச்சி துறைமுகத்தில் தாக்க இந்திய கடற்படை முடிவு செய்தது. பாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் மற்றும் அனைத்து கப்பற்படை தொகுதிகளும் கராச்சி நகரிலேயே விளங்கியதால் கடல் சார்ந்த வணிகத்தின் முக்கிய மையமாகவும் விளங்கியது.
ஆகையால் பாகிஸ்தானின் மேலிடத்துக்கு கராச்சி துறைமுக பாதுகாப்பு முதன்மையாக இருந்ததால் வான் வழியாகவும் கடல் வழியாகவும் அந்த துறைமுகத்துக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்திய கடற்படை கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதலை நடத்தியது. இந்தப் படை நடவடிக்கைக்கான பணியில் 3 வீத்யூத் ரக ஏவுகணை படகுகள், ஐஎன்எஸ் நிபட், ஐஎன்எஸ் நிர்கட் மற்றும் ஐஎன்எஸ் வீர் ஆகிய கப்பல்களும் உபயோகப்படுத்தப்பட்டது.

ஏவுகணை கப்பல்கள் தாக்குதல்
இதைத் தவிர இரண்டு பெட்டியா ரக கார்வேய்ட்டுகள், ஐஎன்எஸ் திர் மற்றும் ஐஎன்எஸ் கில்டன் போன்றவைகளும் தாக்குதல் குழுவில் இருந்தன..இந்தப் போர் குழுவை 2 ஏவுகணை எதிர்ப்பு ரோந்து வாகனங்கள் வழிநடத்தின . 1971ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு இந்த தாக்குதல் பணிக்குழு பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 70 கடல் மைல் தொலைவில் இருந்து பிஎன்எஸ் முகபீஸ், பிஎன்எஸ் கைபர் கப்பல்களை ஏவுகணைகளால் தாக்கி மூழ்கடித்தது..

இந்திய கடற்படைக்கு வெற்றி
இன்னொரு பாகிஸ்தானிய கப்பலான பிஎன்எஸ் ஷாஜகான் சேதப்படுத்தப்பட்ட நிலையில் ஏவுகணை படகுகள் கராச்சி துறைமுகத்தில் உள்ள எரிபொருள் கிடங்குகளை தாக்கி எரிய வைத்தன. பாகிஸ்தான் விமானங்கள் நடத்திய தாக்குதலில் இந்திய கப்பல் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அது பாகிஸ்தானிய கப்பலான பிஎன்எஸ் சுல்பிகர் என்று தெரியவந்தது. இந்த நடவடிக்கை இந்திய கப்பல் படைக்கு ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்தது . இந்திய தரப்பில் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் மிகச் சிறப்பாக தாக்குதல் பணி மேற்கொள்ளப்பட்டது..

கடற்படைக்கு பிரதமர் வாழ்த்து
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 4ஆம் தேதி இந்தியக் கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்திய கடற்படையின் முன்மாதிரியான பங்களிப்பிற்காக நாம் பெருமை கொள்கிறோம், இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர் கொள்வதில் நமது கடற்படை வீரர்கள் எப்போதும் முன்னணியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
இதேபோன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய கடற்படை தினத்தினை முன்னிட்டு மரியாதை செலுத்தினார். மேலும், தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை தளபதி புனீத் சதாவும் போர் நினைவுச்சின்னத்தில் இன்று மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications