சிபிஐயின் இடைக்கால இயக்குநருக்கு எதிரான வழக்கு.. மேலும் ஒரு நீதிபதி விசாரணைக்கு மறுப்பு
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக மேலும் ஒரு நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அலோக் வர்மாவுக்கு பதிலாக இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அலோக் வர்மாவே இயக்குநராக பணியை தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான சிபிஐ இயக்குநர் தேர்வு குழுவானது அலோக் வர்மாவை நீக்கிவிட்டு மீண்டும் நாகேஸ்வரராவையே நியமித்தது.
நியமனம் மீறுகிறது
இதை எதிர்த்து தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்தார். அதில் நாகேஸ்வரராவின் நியமனம் சட்ட விரோதமானது. சிபிஐ அமைப்பை ஏற்படுத்திய டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப்பிரிவின் விதிகளை நாகேஸ்வர ராவ் நியமனம் மீறுகிறது என்று பிரசாந்த் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் சிபிஐ இயக்குநர் தேர்வு குழுவில் இருப்பதால் தன்னால் விசாரணை நடத்த முடியாது என கூறி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிமன்ற அமர்வில் இருந்து கடந்த 9 தினங்களுக்கு முன் விலகியுள்ளார்.
சிக்ரியும் விலகல்
இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக நீதிபதி ஏ.கே. சிக்ரி இந்த வழக்கை விசாரிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து சிக்ரியும் கடந்த வாரம் விலகிவிட்டார்.
இன்னொரு நீதிபதியும் விலகல்
இந்த நிலையில் மேலும் ஒரு நீதிபதி என்.வி. ரமணாவும் வழக்கு விசாரணையிலிருந்து விலகிவிட்டார். இதுவரை தலைமை நீதிபதி உள்பட 3 பேர் இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.