கடவுளால் மட்டுமே உங்களை காப்பாற்ற முடியும்.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் வார்னிங்
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக மார்ச் மாதம் 5, 6, 7 மற்றும் 12-ம் தேதிகளில் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையின் முன்னிலையில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.
இதுவரை கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும் நீதிபதிகள் மறக்கவில்லை.

சட்டத்தோடு விளையாடாதீர்கள்
"சட்டத்தோடு விளையாடாதீர்கள்" என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேநேரம் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை ஏற்று அவர் வெளிநாடு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.10 கோடி பிணைத்தொகை
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் போது, அவரது வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், முன்னதாக 10 கோடி ரூபாயை பிணைத் தொகையாக உச்சநீதிமன்றத்தில் அவர் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் தொடர்
ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ டென்னிஸ் விளையாட்டு தொடர்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்று முன்னதாக, கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
நீங்கள் சட்டத்தோடு விளையாடினால் கடவுளால் மட்டுமே உங்களை காப்பாற்ற முடியும், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications