ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரெய்லர் தான்.. இந்தியாவின் திட்டம் என்ன? - விளக்கும் Ex ராணுவ அதிகாரி
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இது டிரெய்லர் தான். பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா தன் முழு பலத்தை களமிறக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

அதன்படி நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
1972 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில், இந்தியா போர் அல்லாமல் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது.
ஆனாலும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து காலை 10 மணியளவில் இந்திய ராணுவம் விளக்கமளிக்க உள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி (பிரிகேடியர்) கோவிந்த் சிங் சிசோடியா பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், "பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ராணுவம் மிகவும் தெளிவாக திட்டமிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகர்வு தான்.
இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இது ஏதோ குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடத்தப்படும் தாக்குதலாக கருத வேண்டாம். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை நடத்தியிருக்கும் தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான். இதிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா விடுத்துள்ள வலுவான செய்தியை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க நினைத்தால் இந்தியாவின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருக்கும். அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்." என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications