IC814 விமான ஹைஜாக்.. பின்னணியில் செயல்பட்ட தீவிரவாதி யூசுப் அசார் ஆபரேஷன் சிந்தூரில் பலி! யார் இவர்?
டெல்லி: இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அட்டாக்கில் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளில் முகமது யூசுப் அசாரும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் உறவினர். விமான கடத்தலில் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டவர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை 7ஆம் தேதி நள்ளிரவில் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் அடுத்தடுத்து தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளது. மீண்டும் பயங்கரவாதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல்
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் முக்கியமான 5 பேர் யார் என்பது குறித்த விபரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
முதாசர் காடியன் காஸ்: மர்கஸ் தைபா என்ற அமைப்பின் பொறுப்பாளர். இவரது மரணத்திற்கு பாகிஸ்தான் அரசு ராணுவ மரியாதை வழங்கியது. இறுதிச் சடங்கு பாகிஸ்தான் அரசுப் பள்ளியில் நடந்துள்ளது. இதில் அந்நாட்டின் ராணுவ துணை தளபதி ஹபீஸ் அப்துல் ரவுப் பங்கேற்றார்.
முகமது ஜமீல்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடைய ஹபிஸ் முகமது ஜமீல் என்பவர் பிரபல பயங்கரவாதி மசூத் அசாரின் நெருங்கிய உறவினர்.
முகமது யூசுப் அசார்: மூன்றாவதாக முகமது யூசுப் அசார் என்பவரும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டுள்ளார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இவர் மவுலானா மசூத் அசாரின் உறவினர் ஆவார். அந்த அமைப்பில் ஆயுதங்களை கையாளுவதில் நிபுணத்துவம் பெற்றவர். முன்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தொடர்பு கொண்டவர்.
காலித்: லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த காலித் என்பவரும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் இவருக்கு தொடர்பு உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தி வருவதில் திறமையானவர் எனக் கூறப்படுகிறது.
முகமது கசன் கான்: இவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ் இ இகமது அமைப்பின் தளபதி அஸ்கர் கான் என்பவரின் மகன். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களுக்கு இவருக்கு தொடர்பு உண்டு.
யார் இந்த யூசுப் அசார்?
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் முக்கிய உறுப்பினரான யூசுப் அசார், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தினருக்குக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டவர். ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு உஸ்தாத் ஜி, முகமது சலீம் மற்றும் கோசி சஹாப் என்ற பெயர்களும் உள்ளன.
காத்மண்டுவில் (நேபாளம்) இருந்து டெல்லிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தல் சதித் திட்டத்திலும் அசார் ஈடுபட்டார். அவருக்கு எதிராக இண்டர்போல், A-565/6-2000 என்ற ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.
IC-814 விமானம் கடத்தல்
விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்து, அப்போது தாலிபான் ஆட்சியின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு திருப்பி அனுப்பிய கடத்தல்காரர்களில் யூசுப் அசாரும் ஒருவர். மசூத் அசார் உட்பட சிறையில் அடைக்கப்பட்ட பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோரிய கடத்தல்காரர்கள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர் .
அந்த விமானத்தில் 170க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விமானத்தை வெடிக்கச் செய்வோம் என்று கடத்தல்காரர்கள் மிரட்டினர். பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்காக மசூத் அசார் உட்பட மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியா இறுதியில் ஒப்புக்கொண்டது.
விமானக் கடத்தலைத் தொடர்ந்து, கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட யூசுப் அசாரை கைது செய்ய இந்தியா இன்டர்போலின் உதவியை நாடியது. அதன் பேரில் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனினும், யூசுப் அசார் பிடிபடவில்லை. இந்நிலையில் அவர் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications