ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனுத் தாக்கலின் போது ராகுல் காந்தி, சரத்பவார், பரூக் அப்துல்லா, ஆ.ராசா, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.
நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த யஷ்வந்த் சின்ஹா, ரப்பர் ஸ்டாம்பாக இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு தேவையில்லை. ரப்பர் ஸ்டாம்ப்பாக செயல்படும் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசத்துக்கு பேரழிவு ஏற்படும். நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் எதிரிகளை குறிவைக்க அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என கூறியிருந்தார்.
யஷ்வந்த் சின்ஹாவுக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யஷ்வந்த் சின்ஹா இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, திமுகவின் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications