அன்னை தெரசா, ஜாமியா இஸ்லாமியா என 12,000 தொண்டு அமைப்புகளின் அனுமதி ரத்து? என்ன காரணம். பரபர தகவல்
டெல்லி: அன்னை தெரசா மிசினரி உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கடந்த வாரம் தகவல் வெளியான நிலையில், வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கான உரிமையை எத்தனை தொண்டு நிறுவனங்கள் இழந்துள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் 22,000 நோயாளிகள், பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி ட்வீட் செய்திருந்தார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இணையத்தில் பலரும் கூட மத்திய அரசின் இந்த செயலை கடுமையாகச் சாடினர். இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
அன்னை தெரசா மிசினரி
அப்போது தான் அன்னை தெரசா மிசினரி சார்பில், தங்கள் வங்கிக் கணக்குகளை யாரும் முடக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல மத்திய அரசும் இது தொடர்பாகக் கூறுகையில், " வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான சட்டவிதிகளைப் பின்பற்றாத காரணத்தால் FCRA எனப்படும் Foreign Contribution (Regulation) Act கீழ் அன்னை தெரசா மிசனரியின் விண்ணப்பம் டிசம்பர் 25-ந் தேதி நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை" எனத் தெரிவித்திருந்தது.
உள் துறை அமைச்சகம்
இந்நிலையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை இழந்துள்ளது. இதில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் FCRA அனுமதி கோரி விண்ணப்பிக்கவே இல்லை என உள் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நினைவூட்டல்கள் அளிக்கப்பட்ட போதிலும் அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தை அனுப்பவில்லை என்றும் தொண்டு நிறுவனங்களே இதற்கு விண்ணப்பிக்காத போது, அதற்கு எப்படி அனுமதி அளிக்க முடியும் என உள் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
12 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள்
ஒட்டுமொத்தமாக சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் தங்களின் FCRA அனுமதியை இழந்துள்ளன. இதில் ஆக்ஸ்பாம் இந்தியா அறக்கட்டளை, ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தொழுநோய் மிஷன் உள்ளிட்ட முக்கிய தொண்டு நிறுவனங்களும் அடக்கம். இவர்களின் FCRA அனுமதி கடந்த சில மாதங்களில் காலாவதியாகிவிட்டன. இந்த பட்டியலில் இந்தியக் காசநோய் சங்கம், இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
எவ்வளவு
இந்தியா முழுவதும் தற்போது வெளிநாட்டு நிதியைப் பெற FCRA அனுமதியைப் பெற்ற 16,829 தொண்டு நிறுவனங்களே உள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியைத் தொண்டு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவல்களுக்குப் பின்னரே, மத்திய உள் துறை அமைச்சகம் தொண்டு நிறுவனங்கள் பொறும் வெளிநாட்டு நிதி மீதான பார்வை திரும்பியுள்ளது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இளம் பெண்களை மதமாற்றம் செய்ய முயல்வதாக மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி நடத்தும் குழந்தைகள் இல்லத்தின் இயக்குநருக்கு எதிராகக் குஜராத்தில் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
FCRA என்றால் என்ன?
வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் சட்டமே Foreign Contribution (Regulation) Act ஆகும். இதுபோன்ற வெளிநாட்டு நன்கொடைகள் உள்நாட்டு பாதுகாப்பைப் பாதிக்காது என்பதை உறுதி செய்கிறது. 1976இல் இச்சட்டம் முதன்முதலில் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் 2010இல் இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விரும்பும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
விதிகள் என்ன
FCRA அனுமதி ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாசார நோக்கங்களுக்காக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம். இந்த நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் வருமான வரி சட்டத்தின் கீழ் ஆண்டு வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாகக் கடந்த 2015இல் உள் துறை அமைச்சகம் புதிய விதிகளை அறிவித்தது. அதில் வெளிநாட்டு நன்கொடை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கக் கூடாது. மேலும் நட்புறவு நாடுகளின் உறவுகளைப் பாதிக்கக் கூடாது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்காது என்று NGOகள் உறுதிமொழியை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைக் கண்காணிப்பு அமைப்பு எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்யலாம் எனக் கூறப்பட்டிருந்தது.